அருஞ் செலற் பேராறு என்றார்” என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் கூறுவர். பெருவறற் காலத்தும், வானம் மழை சொரிவது போலச் செங்குட்டுவன் கொடை வழங்கும் திறம் இனிக் கூறப்படுகிறது. 19 - 20. உறுவர்..........சிதறி. உரை : உறுவர் - தன்னை யடையும் புலவர்களை ; ஓம்பாது ஆர உண்டு - உண்பனவற்றை ஓம்பாது நிரம்ப வுண்பித்துத் தானும் அவருடனுண்டு ; நகைவர் ஆர இன்பச் சுவை நல்கும் பாணர் கூத்தர் முதலாயினார் நிரம்பப் பெறுமாறு ; நன்கலம் சிதறி - நல்ல பொற்கலன்களை வரைவின்றி வழங்கி எ - று. உறுவர், இன்மையால் வாடி வருபவர். பாடல் ஆடல்களால் இன்புறுத்தும் பாணர் கூத்தர் முதலாயினார் நகைவராதலின், உறுவர் புலவர் மேற்றாதலை யறிக. அவரை யுண்பித்துத் தான் உண்டலின், “உறுவர் ஓம்பாது ஆர வுண்டு” என்றார். சிதறி யென்றதனால், வரைவின்றி நல்குதல் பெற்றாம். பாணர் முதலாயினார்க்கு வழங்கும் வழக்குப் பிற்காலத்தும் அரசர்பால் காணப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்த மூன்றாங் குலோத்துங்க சோழன், “பெரும் புலவரும் அருங் கவிஞரும் நாப்புறு நல்லிசைப் பாணரும் கோடியரும் குயிலுவரும் நாடு நாடு சென்று இரவலராய் இடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ் படைப்பக்” (S. I. I. Vol. V. No. 645) கொடை வழங்கிய செய்தி கல்வெட்டுக்களால் தெரிகிறது. 21 - 22. ஆடு சிறை..........பெறுக. உரை : ஆடு சிறை யறுத்த நரம்பு சேர் இன்குரல் - ஆடுகின்ற சிறையையுடைய கின்னரப் பறவையை இசையால் வென்ற யாழ் நரம்பின் இசையுடன் ஒன்றாய் இயைந்து செல்லும் இனிய மிடற்றால் ; பாடு விறலியர் - பாடுதலையுடைய விறலியர் ; பல்பிடி பெறுக - பல பிடியானைகளைப் பெறுக என்றும்; ஆடு சிறை : ஆகுபெயர். பழையவுரைகாரர், “கின்னரமென்னும் புள்ளின் இசை யெழுகின்ற சிறகினைத் தோற்பித்த யாழ் நரம்பென்றவாறு” என்றும், “இனிச் சிறை யென்றதை அந்நரம்பின் ஒலி யெழாமற் சிறைப்படுத்தி நிற்கும் அதன் குற்றமென்பாரு முளர்” என்றும் கூறுவர். குரல், மிடற்றிசை. பாணனுக்குக் களிறும் விறலிக்குப் பிடியும் கொடுத்தல் மரபு. “களிறு பெறுவல்சிப் பாணன்” (நற். 350) என்றும் பிறாண்டும் இவ்வாசிரியர் கூறுதல் காண்க. 23 - 25. துய்வீ..........பெறுக. உரை : துய்வீவாகை - மேலே துய்யினையுடைய வாகைப் பூவும்; நுண்கொடி உழிஞை - நுண்ணிய கொடியாகிய வுழிஞையும் சூடும்; வென்றி மேவல் - வென்றி விருப்பும் ; உருகெழு சிறப்பின் - பகைவர்க்கு உட்குதலைப் பயக்கும் சிறப்பும்; கொண்டி மள்ளர் - பகைப்புலத்தே |