மேலே “பிடிபெறுக” (வரி. 22) “கொல் களிறு பெறுக” (வரி. 25) என்புழியும் கூட்டப்பட்டது. “என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி, ஒன்று வழியுடைய வெண்ணினுட் பிரிந்தே” (தொல். சொல். இடை. 46) என்பது தொல்காப்பியம். “இகல்வினை மேவலை” யென்றதனால், “கொடைவினை மேவல்” வருவிக்கப்பட்டது. எச்சவும்மை தொக்கு நின்றது. அகவலர்க்குக் குதிரை கொடுப்பது வழக்காதலை, “நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரொடு மா சிதறி” (மதுரை. 223) என்பதனா லறிக. இனி, பழையவுரைகாரர், “நுண்கோல் பிறப்புணர்த்துங் கோல் ; நரம்பென்பது மொன்று” என்றும், “அகவலன், பாடும் பாணன்” என்றும், “என்றும் என்புழி உம்மையை இசைநிறை யும்மை யாக்கி, அவ்வென்றென்பதனை முன்னெண்ணி நின்ற வியங்கோட்களுடன் கூட்டிப் பின் அதனை இகல்வினை மேவலை யென்னும் வினையொடு முடிக்க” என்றும் கூறுவர். என்றென்பதனை இகல்வினை மேவலை யென்பதனோடு கூட்டியவழி, என்று வழங்குதல் குறித்து இகல்வினை மேவுவா யாயினை யென்றுரைத்துக்கொள்க. போரிற் பெற்ற களிறு பிடி, மா முதலியவற்றை வீரர் முதலாயினார்க்கு வழங்குதல் மரபு என்று மென்றே கோடற்கும் இசைந்து, “இனி என்று மென்பதனை முன்னின்ற வியங்கோட்களுடன் கூட்டலுமொன்று” என்று பழையவுரைகாரர் கூறுவர். “முன்னின்ற உண்டு, சிதறி யென்னும் எச்சங்களையும் மேவலை யென்பதனோடு முடிக்க” என்பது பழையவுரை. இனி, “மறுகு சிறை” என்பதற்கு, திரு. உ. வே. சாமிநாதையர் “மறுகுசிறை யென்றது ஆரோகண அவரோகணக் கிரமம் போன்ற ஓர் இசை முறை போலும்” என்பர். ஆரோகண அவரோகணக் கிரமத்தை ஆளத்தியென்பவாகலின், இதற்கு வேறு பொருள் கொள்ளப்பட்டது. மறுகு சிறை இசைவகையாயின், மன்றத்தே இருந்து பாடுவதும், தெருவிலே நடந்து பாடுவதுமாகிய பாடல் வகையுள் ஒன்றாகக் கருதுவது பொருத்தமாம். இவ்வகவலர் முதலாயினாரைப் புரப்பதே தமக்குப் பேரிசையாகப் பண்டைப் பெருமக்கள் கருதினமையின், இவர்களை விதந்தோதினர், “நுண்கோ லகவுநர்ப் புரந்த பேரிசைச், சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்” (அகம். 152) எனச் சான்றோர் கூறுதல் காண்க. 29 - 31. பகைவரும்............கற்ப. உரை : பகைவரும் தாங்காது புகழ்ந்த - பகைவராயினாரும் தம் மனத்தெழுந்த வியப்பினைத் தாங்காது புகழ்ந்து பாராட்டும் ; தொலையாக் கற்ப - கெடாத கல்வி யறிவு ஒழுக்கங்களை யுடையாய் எ - று. “தூங்கு கொளை முழவின்” என்பதனைத் “தவாஅக் கள்ளின்” (வரி. 35) என்பதனோடு கூட்டிக் கலிமகிழ் என்றதனோ டியைக்க. கேளாரும் வேட்ப மொழிவது சொல்வன்மையின் சிறப்பாதல்போல, பகைவராயினாரும் வியந்த பரவுவது கல்வி யறிவுக்கு மாண்பாதலின், “பகைவரும் தாங்காது புகழ்ந்த கற்ப” என்றார். கேடில் விழுச்செல்வ மென்பது பற்றி, ஈண்டுக் கல்வியறிவு,“தொலையாக்கற்” பெனப்பட்டது. கற்றல்வினை கல்வியாதலின், கற்பன கற்றுங் கற்றாங் கொழுகும் ஒழுக்கம் கற்பென வறிக. “நிலவரை |