குட்டுவனோடு அண்மையிலிருந்து புணர்தலும் பழகலும் இலனாய் நெடுஞ்சேணிடத்தே யிருந்தானாயினும், அறுகை யென்பான் அக் குட்டுவன்பால் உண்மை நண்பனாதலால், செங்குட்டுவனும், அவன் துணைமையினை வேண்டானாயினும் அவற்குத் துணை செய்யும் கருத்துடையனாய், மோகூர் மன்னனொடு பொருவான் தான் பொருதற்குக் காரணங்கூறுவது போல, “சேணானாயினும் கேள் என மொழிந்தான்” என்றும், இவ்வாறே அறுகையும் தனக்குச் செங்குட்டுவன் கேண்மையனென் றுரைத்துக் கொண்டு சென்று, மோகூர் மன்னனொடு பொருது தோற்று வேற்றுப் புலத்துக் கோடியொளிந்து கொண்டா னென்பார், “புலம் பெயர்ந் தொளித்த” என்றும், அஃது அவ்வறுகைக்கு இளிவரவே யன்றி, செங்குட்டுவதற்குப் பெருநாணம் பயந்தமையின், “களையாப் பூசல்” என்றும் கூறினார். தம்மைச் சேர்ந்தார்குளவாகும் இளிவரவுகளைத் தமக்கு உளவாயினவாகக் கருதி நாணலும், அவற்றைப் போக்கி நலம் செய்தலும் தலைமக்கட்குப் பண்பாதலால், குட்டுவன் மோகூர் மன்னன்பால் போர்குறித்துச் செல்வானாயினானென வறிக. மோகூர் மன்னனைப் பழையன் என்று இப்பத்தின் பதிகமும் சிலப்பதிகாரமும் (27: 124-6) கூறுகின்றன. இவனுடைய மோகூர் நலத்தை ஆசிரியர் மாங்குடிமருதனார், “மழை யொழுக்கறாஅப் பிழையா விளையுள், பழையன் மோகூர்” (மதுரைக். 507-8) என்று கூறுவர். மதுரைக்கு வட கிழக்கில் உள்ள திருமோகூர் இது போலும். பழையன் என்பான் ஒருவன் காவிரி பாயும் நாட்டுப் போஒர் என்னும் ஊரிடத்தே யிருந்து சோழர் கீழ் வாழ்ந்தான். சோழர் ஒரு காலத்தே கொங்கு நாட்டவரைப் பணிவிக்கக் கருதிப் போர் தொடுத்த ஞான்று, அவர் பொருட்டு இப் போஒர்ப் பழையன் அதனைச் செய்தானென நற்றிணை (10) கூறுகின்றது. இவன் வழியினனாதலால் இம் மோகூர்ப் பழையன் பால் அறுகைக்கு வெறுப்பும் பகைமையும் உண்டானதால், மோகூரை முற்றுகையிட்டு ஆற்றாமையால், அறுகை புலம்பெயர்ந் தொளித்தான் என அறிக. தா, வருத்தம். தாவுறீஇ யென்றது வருத்தம் உறுவித் தென்றவாறு என்றது, அரண்களின் வலியழித்துச் சிதைவித்தவாறாயிற்று. அணங்கு, தெய்வம். சிறிதும் விலக்கொணா வகையில் திடீரென்று தாக்கி அரண்களையழித்தமை தோன்ற, “அணங்கு நிகழ்ந்தன்ன அரண்கள் தாவுறீஇ” என்றார். பகைவர் விலங்கு முதலிய உயிர்களால் நிகழும் கேட்டினும் தெய்வத்தால் நிகழ்வது விலக்கொணா வீறுடைமை பற்றி, “அணங்கு நிகழ்ந்தன்ன” என்றார். பழையன் வேல் வல்லனாதல் பற்றி இத்துணையுங் கூறல் வேண்டிற்று. தோற்ற வேந்தனது முரசினைக் கோடல், பண்டைத் தமிழ் வேந்தர் மரபாதல்பற்றி, “முரசங்கொண்டு” என்றும், எதிர்ந்த வேந்தனை ஈடழித்து அவனுரைக்கும் வஞ்சினத்தைப் பொய்ப்படுத்திப் பணியச் செய்தல் வேந்தரது வீரத்துக்குச் சிறப்பாதலால், “நெடுமொழி பணித்து” என்றும் கூறினார். பழையனது காவல் மரம் வேம்பாதலின், “வேம்பு முதல் தடிந்து” என்றார். இனிப் பழைய வுரைகாரர், “அறுகை யென்பான் மோகூர் மன்னர்க்குப் பகையாய்ச் சேரனுக்கு நட்பா யிருப்பானோர் குறுநில |