இனிப் பழையவுரைகாரர், “கோடு, சங்கு” என்றும், “முழங்கென்றது அவ் வியமரங்களுக்கு இடையிடையே முழங்குகின்ற என்றவா” றென்றும், பீடு கெழு செல்வ மென்றற்கு “படைச் செல்வ” மென்றும், “பீடு, வலி” யென்றும், “மரீஇய கண்ணென்றது அப்படை முகத்திலே நாடோறும் அமர்ந்தும் துயிலெழுந்தும் உலவிப் பழகின கண்” ணென்றும் கூறுவர். மேலும் அவர், “பாடரி தியைந்த சிறு துயிலையுடைய கண்” எனவும், “இயலாது இசையெடுப்பும்” எனவும் கூட்டுவர். பாடரி தியைந்த சிறுதுயில் என்றதற்கு, “இராப்பொழு தெல்லாம் பகைவரை வெல்கைக்கு உள்ளத்திற் சென்ற சூழ்ச்சி முடிவிலே அரிதாகப்படுதல் இயைந்த சிறு துயில்” என்று கூறுவர். இனி எவ்வாறு கூட்டினும் பாசறைக்கண்ணும் மலையிடத்துப் போலக் குட்டுவன் சிறுதுயிலே பெறுகின்றானென்ற முடிபெய்துவது காண்க. பாசறைக்கண் சூழ்ச்சியிற் சென்ற உள்ளத்தால் சிறு துயிலே பயின்ற கண்ணாதலான், மென்பிணி யவிழ்ந்தவழிச் சூழ்தற்குரிய திண்மையின், அந்நாள் பலவும் நினக்கு எவ்வாறு கழியும் என்பார், “எவன் பல கழியுமோ பெரும” என்றார். பல நாட்கள் பாசறை மரீஇக் கழிதலால், “கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் பொழுதுகொள் மரபிற்” கழியும் நாள் சிலவென்பது பெறுதும். அச்சிலவும் சிறு துயிலே பெறுதலின், ஏனைப் பொழுது கழியுந் திறமே ஆசிரியர் அறியக் கருதுவார் போலச் சிறுதுயிலே பெறும் சிறப்புக் செங்குட்டுவன்பால் உண்மையும், அதனால் அவன் காம வேட்கையினும் போர் வேட்கை மிக்கவன் என்பதை வற்புறுத்தினமையும் பெற்றாம். இதுகாறும் கூறியது, பெரும, நீ காவிரியன்றியும் கூடலனையை ; வெருவரு தார்ப்புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை ; முயக்கத்துப் பொழுதுகொள் மரபின் மென்பிணி எவன்பல கழியுமோ; பீடுகெழு செல்வம் மரீஇய நின்கண் பாசறை மரீஇப் பாடரி தியைந்த சிறு துயில் இயலாதாகலான் என்று வினை முடிபு செய்து கொள்க. இனிப் பழையவுரைகாரர், “நீ கூட லனையை ; பெரும, தார்ப்புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை யாகையாலே யான் நின்னையொன்று கேட்கின்றேன் ; பீடுகெழு செல்வம் மரீஇயகண், முயக்கத்துப் பொழுதுகொள் மரபின் மென்பிணி யவிழ, நாள்பல நினக்கு எவன் கழியுமோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “தார்ப்புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை யென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால், துறை, வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.” |