துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் : வடுவடு நுண்ணயிர். 1 - 9. துளங்குநீர் ........................பொலிதந்து. உரை : துளங்கு நீர் வியலகம் - அசைகின்ற நீர் நிரம்பிய அகன்ற கடற்பரப்பானது ; கலங்கக் கால்பொர - கலங்கும்படி காற்று மோதுதலால்; விளங்கு இரும் புணரி - விளங்க வெழுகின்ற பெரிய அலைகள்; உரும் என முழங்கும் - இடிபோல முழங்கும்; குட புலக் கடல் சேர் கானல் முன்னி - மேலைக் கடலைச் சார்ந்த கானற்சோலை நோக்கிச் செல்லலுற்று; கூவல் துழந்த தடந் தாள் நாரை- பள்ளங்களிலே யிருந்து மீனாகிய இரை தேடி வருந்தின பெரிய கால்களையுடைய நாரை ; வண்டிறை கொண்ட குவியிணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் - வண்டு தங்குகின்ற குவிந்த பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மரத்தின் பெரிய கிளையிலே தங்கும் ; அடும்பு அமல் - பூக்கள் மலர்ந்த அடம்பங் கொடிகள் நெருங்கிய; தண் கடற் பரப்பின் அடைகரை - தண்ணிய கடற்பரப்பினைச் சார்ந்த கரையிலே ; அலவன் ஆடிய வடு அடும் நுண்ணயிர் - நண்டுகள் மேய்வதனா லுண்டாகிய சுவடுகளை மறைக்கும் நுண் மணலை ; ஊதை உஞற்றும் - ஊதைக் காற்று எறியும்; தூவிரும் போந்தை பொழில் - தூய பெரிய பனஞ் சோலையில் ; அணிப் பொலி தந்து - அரசு மேவும் அணி திகழ் விளங்கியிருந்து எ - று. கடலகத்தே நிரம்பி நிற்கும் நீர் இடையறா அலைகளால் அசைத்த வண்ண மிருத்தல்பற்றி, அதனைத் “துளங்குநீர் வியலகம்” என்றார். இயல்பாகவே துளங்குதலையுடைய கடலில் காற்று முடுகிப் பொருத வழிப் பேரலைகள் எழுந்து முழங்குமாதலின், “கால்பொர விளங்கிரும் புணரி யுருமென முழங்கும்” என்றார். காற்று முடுகிப் பொருதமை, “வியலகம் கலங்கக் கால்பொர” என்றதனாற் பெற்றாம். கானல், கடற்கரைச் சோலை. குடபுலக் கடல்சேர் கானல் என மாறிக் கூட்டுக. “குடபுல மென்றது தன் |