செல்லும் வன்கண்மையினையுடைய போர்வீரரது ; தொலையாத் தும்பை - தோலாமைக் கேதுவாகிய தும்பைமாலை ; தெவ்வழி விளங்க - பகைவர் படையிடையே விளங்கித் தோன்றப் பொருதலால்; பலர்பட பகைவர் பலர் உயிர் துறக்கவும் ; உயர்நிலை யுலகம் எய்தினர் - அவரனைவரும் வீரர் புகும் துறக்கத்தை அடைந்தாராக; நல்லமர் கடந்த - இவ்வாறு நல்ல போர்களை வஞ்சியாது செய்து மேம்பட்ட ; நின் செல் உறழ் தடக்கை - நின்னுடைய இடியினும் மாறுபட்ட பெரிய கை; இரப்போர்க்குக் கவிதல் அல்லதை- இரவலர்க்கு ஈதற் பொருட்டுக் கவிதலை யறியுமேயன்றி; இரைஇய-பிறர் எவரையும் இரத்தற் பொருட்டு; மலர்பு அறியா-மலர்தலை யறியாது ; எனக் கேட்டிகும் - என்று சான்றோர் பலரும் கூறக் கேட்டிருக்கின்றோம் எ - று. கொடி யேந்தி யசைந்து செல்லும் யானைக்கும் தேர்கட்கும் கடற்பரப்பிற் செல்லும் கலத்தை உவமங் கூறல் சான்றோர் மரபு. “வளை மேய் பரப்பின், வீங்குபிணி நோன்கயி றரீஇதை புடையூஉக், கூம்பு முதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன், கடுங்காற் றெடுப்பக் கல்பொருதுரைஇ, நெடுஞ்சுழிப்பட்ட நாவாய் போல, இருதலைப் பணில மார்ப்பச் சினஞ் சிறந்து, கோலோர்க் கொன்று மேலோர் வீசி, மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக், கந்துநீத் துழிதரும் கடாஅ யானையும்” (மதுரை. 375 -83) என்றும், “ஊர்ந்த தேரே, சிறு குடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த, கடுஞ்செலற் கொடுந்திமில் போல” (அகம். 330) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. களிறும் தேரும் வேறுவேறு அணிவகுக்கப்பட்டு வேறுவேறு நெறியிற் சேறல் பற்றி, “பெருங்கலி வங்கம் திசை திரிந்தாங்கு” என்றார். திரிந் தாங்குக் கொல் களிறு மிடைந்து என மாறிக் கூட்டுக” என்பது பழைய வுரை. தம் நாட்டிலின்றி வேறு நாட்டில் உளவாய்க் கடல் கடந்து கொணர்தற் குரியவா யிருத்தல்பற்றி, “அருங்கலம்” எனப்பட்டன. அருமை நன்மை மிகுதிபற்றி யென்றுமாம் ; “விழுமிய நாவாய் பெருநீரோச்சுநர், நனந்தலை தேஎத்து நன்கல னுய்ம்மார்” (மதுரை. 321 - 2) எனச் சான்றோர் கூறுப. ஒரு திசையே நோக்கிப் பல நெறியாற் சேறல்பற்றி, “திசை திரிந்து” என்றார். மை, கருமுகில், மா, கருமை. கேடகம் கருமைநிற முடைத்தாதல்பற்றி, “மாயிரும் பஃறோல்” என்றும், தோலாற் செய்யப்படுதலின் தோலென்றும் கூறப்பட்டது. “மழையென மருளும் பஃறோல்” (புறம். 17) என்று வருதல் காண்க. தோலும் எஃகும் சுமந்து எண்ணா தெழுதரும் ஆடவர் என இயைக்க. இனி, பஃறோல் மெய்புதை யரணமாதலை யெண்ணாது என இயைத்தல் பொருந்தாது ; என்னை, தோலையின்றி, வேலும் வாளும் ஏந்தாராதலாலும், தோலுடைமை யால் வேறு கவசம் வேண்டாவென் றெண்ணற்கு இடமுண்மையாலும், தோலேந்தாது சேறல் படைமடமா மாதலாலு மென்க. மெய்புதை யரணம், இரும்பினாற் செய்யப்படும் கவசம்; புலித்தோலாற் செய்யப்படுதலு முண்டு. “புலி நிறக்கவசம்” (புறம். 13) என வருதல் காண்க. “மண்டமர் நசையொடு கண்படை பெறாது” (முல்லை. 67) செருக்கிச் செரு வேட்ட உள்ளமுடைய ரென்பது தோன்ற, “முன் சமத் தெழுதரும் வன்கணாடவர்” என்றார். அரண |