ஊரல் அம் தித்தி - பரந்த தேமலையும் ; ஈர் இதழ் மழைக்கண்- குளிர்ந்த இமைகள் பொருந்திய குளிர்ந்த கண்களையும் ; பேர் இயல் அரிவை - பெரிய இயல்பையு முடைய நின் மனைவியாகிய அரிவை; உடன் றனளாகி - ஊடலுற்று ; ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி - ஒள்ளிய இதழ் விரிந்த பூவை யொக்கும் சிறிய அடிகளிலே அணிந்துள்ள ; சில பல் கிண்கிணி - இரண்டாகிய பல மணிகள் கோத்த கிண்கிணியானவை ; சிறு பரடு அலைப்ப - சிறிய பரட்டின்கட் கிடந்து ஒலிக்க ; கொல்புனல் தளிரின் - கரையை யலைக்கும் நீர்ப்பெருக்கால் அசையும் தளிர் போல; நடுங்குவனள் நின்று - வெகுளியால் வாயிதழ் துடிப்ப நடுங்கி நின்று ; நின் எறியர் ஓக்கிய சிறு செங்குவளை - நின்மேல் எறிதற்காக வோச்சிய சிறிய செங்குவளை மலரை ; ஈ என இரப்பவும் - ஈவாயாக என இருகையும் விரித்து நீ இரக்கவும் ; ஒல்லாள் - சிவப்பாறாது ; நீ எமக்கு யாரையோ என - நீ எம்பால் அன்புடையை யல்லை யன்றே என்று சொல்லி ; பெயர்வோள் கையதை - நின் முன்னின்று நீங்கும் அவளுடைய கையகத்தே இருந்தது, காண் எ - று. பாண்டில், கால்விளக்கு;“இடவரை யூன்றிய கடவுட் பாண்டில்”(1) என இளம்பெருமானடிகளும் கூறுதல் காண்க. அப் பாண்டில் சுடர் விட்டெரிதலால் உண்டாகும் விளக்கம் “திருநாறு விளக்க” மெனப்படுகிறது. திருநாறு விளக்கம் என்றது, “செல்வ முடைமை யெல்லாம் தோன்றும் விளக்கு” எனப் பழைய வுரை கூறும். துணங்கையாடற்கேற்ப முழவு முழங்குதலால் “முழவிமிழ் துணங்கைக்கு” என்றார். துணங்கை யெனவே, அதனை யாடும் மகளிரென்பது வருவிக்கப்பட்டது. ஏர்க்களத்தில் மகளிரும் போர்க்களத்தில் வீரரும் பேய் மகளிரும் இத்துணங்கையாடுப. ஊரிடங்களிலும் இரவில் பாண்டில் விளக்கின் ஒளியில் மகளிரும் ஆடவரும் துணங்கை யாடுவது உண்டு. மகளிர் கைபிணைந் தாடுமிடத்து ஆடவர் முதல்வராய்க் கை தந்து ஆடல் தொடங்குத் திறத்தை, தலைக்கை தருதல் என்பர். அதனைச் சேரமான் செய்வதுபற்றி, “சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்து” என்றார். சிலைத்தல் ஏற்றிற்கு இயல்பு ; “ஆமா நல்லேறு சிலைப்ப” (முருகு. 315) எனப் பிறரும் கூறுதல் காண்க. “மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர், எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து” (புறம். 24) என்பதனால் ஆடவர் மகளிர்க்குத் தலைக்கை தருமாறு உணரப்படும். நளிந்தனை வருதல், கூடி யிருந்து வருதல், நளிதல், செறிதல் முருகனும் இவ்வாறு மகளிரொடு விளையாடி யொழுகுதலை, “மென்றோட் பலபிணை தழீஇத் தலைத்தந்து, குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே” (முருகு 216 - 7) என்பதனா லறியலாம். பழைய வுரைகாரரும் நளிதல் என்றற்கு, “தன்னைச் சேவிக்கும் மகளிரொடு குரவை யாடிச் செறிதல்” என்பர். சேரலாதன் துணங்கை மகளிரொடு விளையாடிச் செறிந்து வருதல் அவன் மனைவி ஊடற்கு ஏதுவாயினமையின், “நளிந்தனை வருதல் உடன்றனளாகி” என்றார். நளிந்தனை, “தந்தனை சென்மோ” (ஐங்.159) என்புழிப்போல முற்றெச்சம். வருதல் என்புழிக் குவ்வுருபு விகாரத்தால் தொக்கது. உடலுதல், |