மிக வுயர்த்திக் கூறும் கருத்துத் தோன்ற, “ஈ” என்று இரந்தா னென்ற வாறாயிற்று. ஈத்த வழி, தான் அவனது பரத்தைமைக் கியைந்தவாறாம். அதுவேயுமன்றி அவன் தன்னை எளிதிலடைதற்கு வாயிலாமென்னும் கருத்தால், ஈயா ளாயினாளென்றற்கு, “ஒல்லாள்” என்றார். ஒல்லுதல், உடன்படுதல், “ஒல்லேம் போல்யா மதுவேண் டுதுமே” (ஐங். 88) என்றும், “ஒல்லேன் போல வுரையா டுவலே”(நற். 124) என்றும் வருதல் காண்க. இரப்பவும் ஒல்லாள் என முடிக்க. “நினக்கு எம்பால் அன்பில்லை யாதலால் எம்பால் நீ என்ன முறைமையுடையை” எனப் புலந்து கூறுவாள், பல கூறாது “நீ எமக்கு யாரையோ” எனக் கூறினாள் ; “யாரைநீ யெம்மில் புகுதர்வாய்” (கலி. 98) எனப் பிறரும் கூறுதல் காண்க. எமக்கு என்றது தன் வயின் உரிமையும், நீ யாரையோ என்றது அவன் வயிற் பரத்தைமையும் குறித்து நின்றன என்று கூறியவள், அவன் முன் நின்றவழி, ஆற்றாமை வாயிலாகத் தன்னை யெய்துதற்கு இடனா மென்று “பெயர்வோள்” என்றும், அவனால் நயக்கப்பட்ட குவளையை அவன்பாலுள்ள காதலன்பால் எறியாது கையகத்தே கொண்டிருக்குமாறு தோன்றக் “கையதை” யென்றும் கூறினார். கையதை என்புழி, ஐ யென்னும் இடைச்சொல் அசை நிலை. இனிப் பழைய வுரைகாரர், அவிழக மென்றதற்கு, “அவிழ்ந்த பூ” என்றும், சிறு செங்குவளை யென்றதற்குத், “தான் எறிதற் கோக்கிய சிறியதொரு செங்குவளை யெனச் சிறுமையால் அவள் மென்மை கூறிய சிறப்பான் இதற்குச் சிறு செங்குவளை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இரப்பவும் என்ற செயவெனெச்சத்துக்கும் பழைய உரைகாரர் வேறு முடிபு கூறுவாராய், அதனைக் “கையதை யென்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க” என்றும், “சிறு செங்குவளை பெயர்வோள் கையதை என முற்றாக அறுத்து அது எனப் பின் சுட்டிற் றாக்குக” என்றும் கூறுவர். 25 - 26. கதுமென................வல்லா யாயினை. உரை : கதுமென உருத்த நோக்கமொடு - சட்டென வெகுண்ட பார்வையுடனே ; நீ அது பா அல் வல்லா யாயினை - நீ அச் சிறு செங்குவளை நின்பாற் பகுத்துக்கொள்ளமாட்டாயாயினை எ - று. பிறரால் இரக்கப்படுவதன்றிப் பிறர்பால் இரத்தற்குரியனல்லாத நீ இரந்து கேட்கவும், ஈயாமையே யன்றி, “யாரையோ நீ எமக்கு” என வெகுண்டுரைத்து எதிரே நில்லாது பெயர்ந்தமையின், முன்போல் அவளைப் பெயர விடாது தகைந்து அதனைக் கவர்ந்து கோடற்கு வேண்டும். வெகுளிகொள்ளினும் குற்றமாகாதாகவும் அது செய்யா தொழிந்தனையென்பார், “கதுமென வுருத்த நோக்கமொடு அது நீ பாஅல் வல்லாயாயினை” என்றார். எனவே, இச் செயலாலும் நீ மென்மையுடையை யென்பதே தெரிகின்ற தென்பது கூற்றெச்சம். உருத்த கண்டார்க்கு உட்குவினைப் பயத்தலையுடைய என்றுமாம். உருத்த நோக்கமொடு அதனைக் கவர்ந்து |