கோட்டை வாயிலும் ; கோள்வல் முதலைய குண்டுகண் அகழி - கொலை வல்ல முதலைகளையுடைய ஆழ்ந்த இடத்தையுடைய அகழியும்;வளைந்து செய் - வளைவு வளைவாகக் கட்டப்பட்டு ; வான் உற ஓங்கிய புரிசை-வானளாவ வுயர்ந்த மதிலும் ஆகிய இவ்வெயில்; ஒன்னாத் தெவ்வர் முனைகெட - மனம் ஒன்றாத பகை வேந்தர் போந்து செய்து போர் அழியும்படி ; விலங்கி - குறுக்கிட்டு ; நின்னில் தந்த - நின்னால் கைக்கொண்டு நல்கப்பட்ட;மன் எயில் - துணை வேந்தர்களின் எயிலாகும் ; அல்லதும் - அன்றியும் (அவ்வெயில்); நின் முன்னோர் - நினக்கு முன்னோர்கள் ; முன்னும் பின்னும் - தமக்கு முன்னிருந்தோராலும் பின் வந்தோராலும் ; ஓம்பிய எயில் - துணை செய்து காக்கப்பட்ட எயிலுமாம் ; முகப்படுத்தல் யாவது - திரும்பச் செல்லும் நின் தானையை நேர்முகமாகச் செல்வது குறித்து இவ் வெயிலிடத்தே செலுத்துவது யாதாய் முடியும், எண்ணியருள்க எ-று. சிலம்பின் மூட்டுவாய் அழகாகப் பொறிக்கப்பட்டிருத்தல் பற்றிச் “செம்பொறி” யெனப்பட்டது. தழையாவது பல்வகை மலராலும் தளிராலும் அழகாகத் தொடுக்கப்படுவது. இதன் இயல்பை “மணலாடு மலிர்நி்றை விரும்பிய வொண்டழைப் புனலாடு மகளிர்” (ஐங். 15) என்பதன் உரைக்கண் விரியக் கூறினாம் ; ஆண்டுக் காண்க. இத்தழையை மகளிர் தமக்கு அணியாகத் தொடுத் தணிதல் பற்றி, அணித்தழை யென்றார் . “உடுத்துந் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த வாயம்” (குறுந். 295) என்று பிறரும் கூறுதல் காண்க. கோட்டை வாயி்லில் பகைவரை மகளிராக்கி அவர் அணிந்து கோடற்குச் சிலம்பும் தழையும் பந்தும் கட்டித் தொங்கவிடுதல் பண்டையோர் மரபு. அதனால், “செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும் வாயில்” என்றார். நக்கீரனாரும், “செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி, வரிப்புனை பந்தொடு பாவை தூங்க” (முருகு. 68) என்று கூறுவர். “சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின வென்றது, ஈண்டுப் பொருவீர் உள்ளீரேல், நும் காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையு மொழித்து இச் சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க” வென்றும், “இனி அவற்றை அம் மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாரு முளர்” என்றும் பழையவுரை கூறுகின்றது. வளையிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணு முதலாகப் பல்வகைப் பொறிகள் அமைத்திருத்தல் பற்றிச் சிறப்புடைய வில்லும் அம்பும் விதந்து, “எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்” என்றார். பல்வகைப் பொறிகளும் பகைவர் அணுகாமற் றகைத்தற்குப் பயன்படுதல் பற்றித் “தகைப்” பென்றார். தன்கண் வீழ்ந்தார் நீந்திக் கரையேறமாட்டாதபடி பற்றிக் கொல்லும் செயலால், “கோள்வல்முதலை” யென்றும், அவை வாழ்தற்கேற்ற ஆழமும் அகலமும் உடைமைபற்றிக் “குண்டுகண் ணகழி” (புறம் 37) என மாறோக்கத்து நப்பசலையாரும் கூறுதல் காண்க. “கோள்வல் முதலைய |