41) என்று பிறரும் கூறுவர் . நாமம், ஆகுபெயராய்ப் போரைக் குறித்தது ; அச்சம் செய்வதனை அச்ச மென்றாரென்க. செய்ம்மாரென்னும் மாரீற்று வினைமுற்று எழுதரும் என்னும் வினைகொண்டது ; “மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக் கிளவியொடு முடியு மென்ப” (தொல். சொல். வினை. 10) என்பது தொல்காப்பியம். ஏவல், வியம் என்பன ஒரு பொருளன . இனி, ஏவலை இளையர்க்கும் வியம் தானைத் தலைவர்க்கும் ஏற்றினும் அமையும் . “ஏவல் வியங்கொண் டென்றது, இளையரை முன்பு போர்க்குக் கையும் அணியும் வகுப்புழி யேவித் தாமும் ஏவல்களைச் செய்துகொண் டென்றவா” றென்பர் பழையவுரைகாரர் . போர்க்குக் கையும் அணியுமாய் முற்பட்டுச் செல்லும் சிறப்புப்பற்றி, “இளையரொடு” என்றார். ஒல்லார், வேந்தரையும் தானைத் தலைவரையும் உளப்படுத்தி நின்றது. கை, பக்கம். இனி, “முரசும் நடுவண் படர்ந்து சிலைப்ப எனக் கூட்டி முரசம் பாசறை நடுவே தான் நின்று தன்னொலி பாசறை யெங்கும் படர்ந்து கொண்டு படையை யேவி யொலிப்ப வென வுரைக்க” வென்றும், வலத்த ரென்றது வினையெச்ச வினைக்குறிப்பு முற்” றென்றும், “ஏவலையுடைய வியமென இரண்டாவதுவிரிக்க ; வியம் ஏவல்” என்றும் பழையவுரை கூறும். யானைப் படையைக் கண்ட மாத்திரையே நில்லாது ஞெரே லெனப் பாய்ந்து தாக்கும் வீரமும் கடுமையும் தோன்ற, “நில்லாத்தானை” யென்றார் . “ஓடாத் தானை” யென்னும் வழக்குப் போல யானைப் போரை விரும்பிக் கடுகச் செல்லும் இத் தானையை “நில்லாத் தானை” யென்று சிறப்பித்தமையால் இப் பாட்டிற்கு இது பெயராயிற்றென்றுமாம் . பழையவுரைகாரர், “யானை காணின் நில்லாத் தானை யென்றது, காலாள் முதலாயினவற்றைத் தரமல்ல வென்று கழித்து நின்று யானை காணின் நில்லாது செல்லும் தானை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு நில்லாத் தானை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர் . “தாங்குநர் தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும், எஃகுடை வலத்தர் நின் படைவழி வாழ்நர்” (பதிற் 51) என்புழியும் “நின் படை வாழ்நரும் காலாண்மேற் செல்லாது தாங்குநர் யானைக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தரா யிருப்பர்” என்று பழையவுரை கூறுவது காண்க. 1 - 2. வள்ளியை..............................கண்ணி. உரை: வள்ளியை என்றலின் - வள்ளன்மை யுடையை யென்றுநீ சான்றோரால் பாராட்டிக் கூறப்படுவதால் ; காண்கு வந்திசின் - யான் நின்னைக் காண்டற்கு வந்துளேன் ; உள்ளியது முடித்தி - யான் கருதியதை முடித்துத் தருவாயாக ; நின் கண்ணி வாழ்க - நின் முடிக்கண்ணி வாழ்வதாக எ - று. சேரநாட்டிலிருந்து வந்த பரிசில ரனைவரும் பெருவளம் பெற்று வரக் கண்டதோடு, அவரனைவரும் சேரலாதனது வள்ளன்மையைப் பாராட்டிக் கூறக் கேட்டமை தோன்ற, “வள்ளியை யென்றலின்” என்றும், அத்தகைய வள்ளியோரைக் காண்டலே தமக்கும் பேரின்பந் தருவ தென்பார், “காண்கு வந்திசின்” என்றும், காண வருவோர் தகுதி நோக்கி அவர் குறிப்பறிந்து |