துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : துஞ்சும்பந்தர் 1 - 2. ஆன்றோள் ............................ கொற்றவ . உரை : ஆன்றோள் கணவ - கற்புக்குரிய மாண்புகளாலமைந்த நங்கைக்குக் கணவனே ; சான்றோர் புரவல - நற்குணங்களால் நிறைந்த சான்றோரை யாதரிக்கும் தலைவனே ; அடுபோர்க் கொற்றவ - கொல்லுகின்ற போரைச் செய்யும் வேந்தே ; நின் நயந்து வந்தனென் - நின்னை விரும்பிக் காண்பான் வந்தேன் எ - று. கற்புடைய மகளிர்பால் காணப்படும் மாண்குண மனைத்தும் நிரம்பியிருத்தல் பற்றி, அரசமா தேவியை “ஆன்றோள்” என்றார். “கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்ற மோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்” (தொல். கற்.11) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. சான்றோர் - நற்குணங்களால் நிறைந்த பெருமக்களும் வீரர்களுமாவர் ; இவ் விருதிறத் தோராலும் அரசர்க்குச் செங்கோன்மையும் வெற்றியுமுண்டாதலால், “சான்றோர் புரவல” எனச் சிறப்பித்தார் . இவ்வாறு நற்குண நற்செய்கைகளால் மேம்படும் அரசரைக் காண்டலில் கற்றோரெவர்க்கும் விருப்ப முண்டாதல் இயல்பாதலால், “நின் நயந்து வந்தனென்” என்றார். காரியம் காரணமாக வுரைக்கப்பட்டது. சிறப்புடைய தலைமக்களையும் அரசரையும் |