1 - 3. விழவு ............ கண்ணி. உரை : விழவு வீற்றிருந்த - விழவானது மிக்க சிறப்புடன் எடுக்கப்பட்ட ; வியலுள் ஆங்கண் - அகன்ற ஊரிடத்தே ; கோடியர் முழவின் முன்னர் - கூத்தர் முழக்கும் முழாவின் ஓசைக் கேற்ப அதன் முன்னின்று ; ஆடல் வல்லான் அல்லன் - ஆடுந்தொழிலில் நம் சேரலாதன் வல்லவன் அல்லன் ; அவன் கண்ணி வாழ்க - அவன் முடியில் சூடிய கண்ணி வாழ்வதாக எ - று. விழாக் காலங்களில் ஊர்களில் கூத்தர் முழக்கும் முழவோசையின் தாளத்திற் கேற்ப வீரர் கூடி ஆடுவது மரபாதலால், அதனுண்மை வற்புறுத்தற்குக் “கோடியர் முழவின் முன்னர் ஆடல்வல்லா னல்லன்” என்றார். வியலுள் ஆங்கண் விழா வயருமிடத்துக் கோடியர் முழவிற்கேற்ப ஆடுதல் பகைவேந்தரை வென்று மேம்படும் சிறப்பால் போர்க் களத்தே தேர் முன் நின்று குரவையாடும் வேந்தனான சேரலாதற்குப் பொருந்தாமை தோன்ற “ஆடல்வல்லா னல்லன்” என்றார். வியலுள், ஊர். ஆங்கண், இடம். கோடியர், கூத்தர். கோடியர் முழவின் முன்னர் ஆடல்வன்மை யின்மையால் சேரலாதற்குத் தாழ்வு சிறிதுமில்லை யென்பது தோன்றக் கூறுவார், “வாழ்க வவன் கண்ணி” என்றார். இனி, அவன் போர்க்களத்தே பகைவரை வென்றாடும் குரவையில் வன்மை மிகவுடையன் என்பதனை மேலே கூறுகின்றார். 4 - 8. வலம்படு .................... கோவே. உரை : வலம்படு முரசம் துவைப்ப- வெற்றி முரசம் மிக்கொலிப்ப ; வாள் உயர்த்து - வாளை யுயரவேந்தி ; இலங்கும் பூணன் - விளங்குகின்ற பூண்களை அணிந்து ; பொலங்கொடி உழிஞையன் - பொன்னாற் செய்த உழிஞைக் கொடியைச் சூடி ; மடம் பெருமையின் - அறியாமை மிகுதியால் ; உடன்று மேல் வந்த வேந்து - பகைகொண்டு போர் மேற்கொண்டு வந்து பொருத வேந்தர் ; மெய்ம்மறந்தவாழ்ச்சி - தம்முடம்பைத் துறந்து சென்று துறக்கத்தே வாழ்வு பெறுதலால் ; வீந்துகும் - பட்டுவீழும் ; போர்க்களத்து - போர்க்களத்திலே ; ஆடும் கோ - இனிது ஆடுதல்வல்ல வேந்தனாவான் எ - று. போருடற்றும் வீரரை யூக்கி வெற்றி பெறுவிக்கும் முழக்கத்தையுடையதாதலின், “வலம்படு முரசம்” என்றும், அது பெரிது முழங்குமாறு தோன்றத் “துவைப்ப” என்றும் கூறினார். பிறரும் “வலம்படுவியன்பணை” (பதிற். 17) என்றல் காண்க. வாளைக் கையிலேந்தித் தேர்த்தட்டிலே நின்று வீரருடன் கைபிணைந்தாடும் சிறப்பைச் சுட்டி, “வாளுயர்த்து” என்றார். பூணன், உழிஞையன் என்ற வினைக்குறிப்பு முற்றுக்கள் “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்” (முருகு. 209) என்புழிப்போல எச்சப்பொருளவாயின. பழையவுரைகாரர், “பூணன் உழிஞைய னென்பன வினைக்குறிப்பு முற்” றென்பர் என்ப வாயினும், வினைமுடிபின்கண், பூணனாய், உழிஞையனாய் ஆடும் கோவென்றே யியைப்பர். |