பெரிதும் உவந்து இப் பத்தினைப் பாடியுள்ளார். இதன்கண் இவன் கடல்பிறக் கோட்டிய செய்தியைப் பல பாட்டுக்களில் எடுத்தோதி இன்புறுகின்றார். “இனியாருளரோ நின் முன்னுமில்லை, மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது, விலங்கு வளிகடவும் துளங்கிருங் கமஞ்சூல், வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு, முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே” என்பதனால், பரணர் செங்குட்டுவன் கடல்பிறக் கோட்டிய செய்தியை மிக வியந்து கூறுதலை நன்கு காணலாம். இவன் முன்னோருள் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடற்குள் கலஞ்செலுத்திச் சென்று கடம்ப ரென்பாரை வென்றதும், “சினமிகுதானை வானவன் குடகடல், பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப், பிறகலம் செல்கலாது” (புறம். 126) என மாறோக்கத்து நப்பசலையார் கூறுவதும் நோக்கின் கடலிற் கலஞ்செலுத்திச் சென்று பகைவரொடு கடற்போருடற்றி வெற்றி மேம்படுந் திறம் சேரவேந்தர்பால் சிறந்து விளங்குவது காணப்படும். இக் குட்டுவன் காலத்தே கோயம்புத்தூருக் கண்மையி லுள்ள பேரூர்க் கருகிலோடும் காஞ்சியாற்றின் கரையில் செல்வமக்கள் வேனிற்காலத்திலில் பொழில்களில் தங்கி இன்புறும் பெருஞ் சிறப்பை, “பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை, மேவரு சுற்றமொடு உண்டினிது நுகரும், தீம்புன லாயமாடும் காஞ்சியம் பெருந்துறை” யென்று பாராட்டிக் கூறுகின்றார். செங்குட்டுவன் பெருங் கல்வியுடையன் என்பதை, “தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே” எனவும், அவனுடைய மென்மைப் பண்பும் ஆண்மைச் சிறப்பும் விளங்க, “வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை”எனவும் சிறப்பித்துள்ளார். செங்குட்டுவன் நிலத்தே தன்னை யெதிர்த்த மோகூர் மன்னன் முதலாயினோரை வென்றதை, “வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து, மொய்வளஞ் செருக்கிப் பொசிந்துவரும் மோகூர், வலம்படு குழூஉநிலை யதிரமண்டி.....படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து” சிறந்தான் என்பர். அவன் உலகு புரக்கும் நலத்தை, “உலகம் புரைஇச், செங்குணக் கொழுகும் கலுழி மலிர்நிறைக், காவிரி யன்றியும், பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கடல் அனையை” என எடுத்தோதுவர். செங்குட்டுவனுடைய அறச்செயல் நலமும் மறச்செயல் மாண்பும் இவர் பாட்டுக்களில் தொடக்கமுதல் இறுதிவரை இன்பம் ஊற்றெழப் பாடப்பட்டுள்ளன. காக்கைபாடினியார் நச்செள்ளையார் : செள்ளை யென்பது இப் புலவர் பெருமாட்டியின் இயற்பெயர.் செந்தமிழ்ப் புலமையாற் பெற்ற சிறப்புக்குறித்து இவர் பெயர், முன்னும் பின்னும் சிறப்புணர்த்தும் |