செல்உறழ் மறவர் - இடிபோலத் தாக்கும் வீரர் ; தம்கொல் படைத் தரீஇயர் - தத்தம் கொல்லுகின்ற படையை யேந்தி வருவார் ; இன்று இனிது நுகர்ந்தனமாயின் - இன்று நாம் நுகரக்கடவவற்றை இனிது நுகர்ந்தேமாயினும் ; நாளை - நாளைக்கு; மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது - மண்ணாற் கட்டப்பட்ட பகைவர் மதில்களைக் கடந்த பின் னன்றி ; புகா உண்குவ மல்லேம் - உணவு கொள்ளேம் ; எனக் கூறி - என வஞ்சினம் கூறி ; கண்ணி கண்ணிய வயவர் பெரு மகன் - தாம் சூ டிய போர்க்கண்ணிக்கு ஒப்பப் போர் வினை செய்யக் கருதிய வீரர்களையுடைய பெருமகன் என்றும்; வெள்ளிய பனந்தோட்டிலே நல்ல நிறமான பூக்களை விரவி நிறம் விளங்கத் தொடுத்தணியும் இயல்பினராதலின், “வெண்தோட் டசைத்த ஒண்பூங் குவளையர்” என்றார் . ஈண்டுக் குவளை கூறியதுபோல, வேங்கை வாகை முதலியவற்றையும் பனந்தோட்டுடன் கட்டுவர் என்ப ; இதனை, “வேங்கை யொள்ளிணர் நறுவீப், போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து” (புறம். 265) என்றும், “மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வீ” (பதிற். 66) என்றும் வருதலாலறிக. குவளையர் ; குறிப்பு முற்றெச்சம். இனிப் பழையவுரைகாரர், வெண்தோடு பனந்தோ டென்றும், தோட்டின் கண்ணென விரிக்க வென்றும், அசைத்தல் தங்குவித்தல் என்றும், “குவளைய ரென்பது வினையெச்ச வினைக் குறிப்புமுற்று ; அதனைக் கூறியென்பதனோடு முடிக்க” என்றும் கூறுவர். வாள் வாயினை வாண்முக மென்றார். வாளால் வெட்டுண்டு தைப்புண்டு வடுப்பட்டுத் தோன்றுதலால் “வாண்முகம் பொறித்த” என்றும், முகத்தினும் மார்பினும் படும் புண்ணை விழுப்புண் ணெனப் பேணி மகிழ்பவாதலால், “மாண்வரி யாக்கைய” ரென்றும் கூறினார். வெண்போழ்க் கண்ணியர் என்னும் பாட்டிலும் (பதிற். 67) வீரர் சிறப்பு, “வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கைய” ரென்று பாராட்டப்படுமாறு காண்க. குவளையரும் யாக்கையருமாகிய மறவர், தத்தம் படைகளை யெடுக்கலுற்றபோதே, படை தொடும் தம் கையால் பகைவர் மதில்கடந் தல்லது, உணவு தொட்டுண்ணேம் என வஞ்சினம் கூறுமாறு தோன்ற, “இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந்தல்லது, உண்குவ மல்லேம் புகா” எனக் கூறுகின்றனர். படையினைத் தொடும்போது வஞ்சினங் கூறுதலுண்மையினை, “சுணங்கணி வனமுலை யவளொடு நாளை, மணம்புகு வைக லாகுத லொன்றோ .......... நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு, வாரா வுலகம் புகுதலொன்றெனப், படைதொட்ட டனனே குருசில்” (புறம். 341) என்பதனா லறிக. இம் மறவரது மறப் பண்பை, “செல்லுறழ் மறவர்” என்று சிறப்பிக்கின்றார். இடியினும் மிக்க வன்மையுடைமை தோன்ற, “செல்லுறழ் மறவர்” என்பாராயின ரென வறிக. அரைத்த மண்ணாற் செய்யப்படுவது பற்றி இஞ்சி, “மண்புனை இஞ்சி” யெனப்படுகின்றது ; “அரைமண் இஞ்சி” (புறம். 341) என்று சான்றோர் கூறுதல் காண்க. “இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப், பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானால்” (தொல். புறத். 12 |