இதுவுமது. பெயர் : மாகூர் திங்கள் 1 - 6. பகல் .............. தோன்றியா அங்கு. உரை : பகல்நீடு ஆகாது - பகற்போது நீளாமல் ; இரவுப்பொழுது பெருகி நின்ற - இராக்காலம் நீண்டுள்ள ; மாகூர் மாசித் திங்கள் - விலங்குகள் குளிர் மிக்கு வருந்தும் மாசித் திங்களிலே ; பனிச்சுரம் படரும் - பனிமிக்க அரிய வழிகளை நடந்து செல்ல நினையும் ; பாண் மகன் உவப்ப - பாணன் மகிழ்ச்சி யெய்துமாறு ; புல் இருள் விடிய - புல்லிய இருட் காலமாகிய விடியற்போது கழிய ; புலம்பு சேண் அகல - இருளிலும் பனியிலும் வருந்தும் வருத்தம் நெடிதகன்றொழிய ; பாய் இருள் நீங்க - உலகமெங்கும் பரந்துள்ள இருள் நீங்கும் வண்ணம் ; ஞாயிறு பல் கதிர் பரப்பி - ஞாயிறானது பலவாகிய தன் கதிர்களைப் பரப்பி ; குண முதல் தோன்றி யாங்கு - கீழ்த்திசையிலே தோன்றியது போல எ - று. பகல் நீடாகாது இரவுப்பொழுது பெருகி நின்ற, மாகூர் மாசித் திங்கள் என இயைக்க. பகலும் இரவும் திங்கட்குச் சினையாகலின், சினைவினைகள் முதல்வினை கொண்டன. நீடு ஆகாது என்பன ஒரு சொல்லாய் நீளாமல் என்னும் பொருள் தந்தன. பழையவுரைகாரரும், “நீடாகாது பெருகி என நின்ற பகலிரவென்னும் சினைமேல் வினையெச்சம், மாசி நின்ற என்னும் தம் முதலது வினையொடு முடிந்தன” என்றும், “இனி அவ்வெச்சங்களைத் திரிப்பினு மமையும்” என்றும் கூறுவர். அவர் மாசி நின்ற மாகூர் திங்கள் எனக் கிடந்தபடியே கொண்டு, “மாசி யென்றது மாசித் தன்மையை” யென்றும், “மாகூர் தல் மாக்கள் குளிராலே உடல் வளைதல்” என்றும் கூறுவர். முன் பனியின் பிற்பாதியும், பின் பனியின் முற்பாதியுமாகிய தையும் மாசியுமாகிய திங்களே பனிமிக்குக் குளிரால் உயிர்களை வருத்துங் காலமாதலால், “தையு மாசியும் வையகத் துறங்கு” என்பது பற்றி, மாசித் திங்கள் சிறப்பித் தோதப்பட்டது. மாக்கள் குளிர்மிகுதியால் இரைதேடச் செல்லாது பசி மிக்கு உடல் சுருங்கி ஒடுங்கிக் கிடப்பது குறித்து “மாகூர் திங்கள்” என்றார். “மாமேயல் மறப்ப மந்தி கூர” (நெடுதல். 9) என்றாற் போல. பழுமரம் தேர்ந்து செல்லும் பறவைகளைப் போலச் செல்வமும் வண்மையும் சேர வுடையாரை நாடிச்செல்லும் பரிசின் மாக்களுள் பாணர் நெடுஞ் சுரங்களையும் அரிய வென்னாது கடந்து செல்வராதலால், “பனிச்சுரம் படரும் பாண்மகன்” என்றார். விடியலில் எழுந்து வெயில் |