வெம்மை மிகுதற்குள் சுரத்தைக் கடந்து செல்லுங் கருத்தினனாயினும், பின்பனியின் கடுமையால் வருந்தும் வருத்தம் ஞாயிற்றின் தோற்றத்தால் நீங்குவதுபற்றி, “பாண்மகன் உவப்ப” என்றார். கடையாமத்தின் பிற்பகுதியில் ஞாயிற்றின் வரவு காட்டும் வெள்ளொளி பரந்து இரவுப்போதில் திண்ணிதாய்ச் செறிந்திருந்த இருளை நீக்குதலால், செறிவு குன்றிச் சிறிது சிறிதாய்த் தேய்ந்து கெடும் அவ் விருளைப் “புல்லிருள்” என்றும், அது நீங்கிய காலைப்போதில் உயிர்த்தொகைகள் தத்தம் உறையுளில் தமித்து ஒதுங்கிக் கிடந்த நிலையின் நீங்கித் தெளிந்த வுணர்வுடன் வெளிப் போதருவதால், “புலம்பு சேணகல” என்றும், இரவுப்போதில் உலக முற்றும் அணுப்புதைக்கவும் இடமின்றிச் செறிந்திருப்பது பற்றி, “பாயிருள்” என்றும் சிறப்பித்தார் என வறிக. ஞாயிறு தோன்றுதற்கு முன்பே, அதன் பலவாகிய கதிர்கள் முன்னே போந்து இருட்கூட்டத்தின் ஈடழித்து விளக்கம் செய்யும் சிறப்புத் தோன்ற, “பல்கதிர் பரப்பி” என்றார். புல்லிருள் விடிதல் பாண்மகனுவத்தற்கும், பல்கதிர் பரப்புதல் பாயிருள் நீங்குதற்கும் புலம்பு சேணகறற்குங் காரணமாய் நின்றன. இனி, இப் பாட்டின்கண் மாசித்திங்களை மாகூர் திங்கள் என்று சிறப்பித்தது கொண்டு “இச் சிறப்பானே இதற்கு மாகூர் திங்கள் என்று பெயராயிற்” றென்றும், “திங்கள், மாதம்” என்றும் பழையவுரைகாரர் கூறுவர். பகல் நீடாகாது இரவுப்பொழுது பெருகிநின்ற மாசித் திங்களிலே, உவப்ப, விடிய, அகல, நீங்க, பரப்பி, ஞாயிறு குணமுதல் தோன்றியாங்கு என முடிக்க. 7 - 10. இரவல் ................. அரணம். உரை : இரவல் மாக்கள் சிறு குடி பெருக - இரத்தலைத் தொழிலாகவுடைய பரிசிலர்களின் சிறுமையுற்ற குடிகள் சிறுமை நீங்கிப் பொருட்பேற்றால் பெருக்க மெய்தவும் ; உலகம் தாங்கிய மேம்படு - உலகுயிர்களை இனிது புரத்தலால் குடக்கில் சேரர் குடியில் மேம்பட்ட ; கற்பின் - கல்வி யறிவினையுடைய ; வில்லோர் மெய்ம்மறை - வில் வீரர்க்கு மெய் புகு கருவிபோல்பவனே ; வீற்றிருங் கொற்றத்துச் செல்வர் செல்வ - வீறும்பெருங்கொற்றமுமுடைய வேந்தர்க்கெல்லாம் வேந்தாயுள்ளோனே ; சேர்ந்தோர்க்கு அரணம் - தன்னைப் புகலென் றடைந்தோர்க்குக் காப்பாயிருப்பவனே எ - று. ஞாயிறு குணமுதல் தோன்றியதனால் பாண்மகன் உவகையெய்துதலும் உயிர்த்தொகை புலம்பு நீங்கி இன்ப மெய்துதலும் பயனாதல்போல நின் தோற்றத்தால் இரவலர் சிறுமைக்குடி பெருக்க மெய்துவதும், உலகம் நல்லாட்சி பெற்று இன்பமெய்துவதும் உண்டாயின என்பார், “ஞாயிறு குணமுதற் றோன்றி யாங்கு, மேம்படு கற்பின் மெய்ம்மறை” யென்றார். ஞாயிறு குணமுதல் தோன்றியாங்கு” குட திசைக்கட்டோன்றினை யென்பது, “உவமப்பொருளின் உற்ற துணர” (தொல்.உவம.30) நின்றது. இசைத்தமிழ் வளர்க்கும் ஏற்றமுடையராயினும் இரந்து வாழ்தல்பற்றி, “இரவன் மாக்கள்” என்றும், இரத்தற்கு ஏது அவர் குடியின் |