சிறுமை யென்பது எய்த, “சிறுகுடி” யென்றும், சிறுமை நீங்கிப் பொருட்பெருக்கம் எய்துதலால் சேரலாதனுடைய கொடை நலம் தோன்றுதலின், “பெருக” என்றும், “மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்” (புறம். 186) என்பதைத் தேர்ந்து தான் அதற்கு உயிரெனக் கருதி, அரசு காவல் புரிந்து மேம்படுதல் விளங்க, அதனை விதந்தும் கூறினர். இம் மேம்பாடு அவன் பெற்ற கல்விச் சிறப்பைத் தோற்றுவித்தலின், “கற்பின் மெய்ம்மறை” யென்றார். கற்பு, கல்வி. “தொலையாக் கற்பு” (பதிற். 80) எனப் பிறாண்டும் வருதல் காண்க. இனி, கற்பினை வில்லோர்க்கு ஏற்றி யுரைப்பினு மமையும். சேரர்க்கு விற்படையே சிறந்ததாதலின், “வில்லோர் மெய்ம்மறை” யென்றார். அவர் கொடியினும் விற்பொறியே காணப்படும். வீற்றையுடைய கொற்றத்தை, வீற்றிருங் கொற்ற மென்றார். வீறு, பிறிதொன்றற் கில்லாத சிறப்பு. கொற்றமுடையார் செல்வமுடையராதலால், அரசரை, “கொற்றத்துச் செல்வர்” என்றும், அச் செல்வர் பலருள்ளும் தலைசிறந்த வேந்தனாதல் தோன்ற, “செல்வர் செல்வ” என்றும் கூறினார். செல்வமுடையார்க்குச் சீரிய செல்வமாவது தன்னைச் சேர்ந்தோர் “புன்கண் அஞ்சும் மென்கண்மை” (நற். 210) என்பது பற்றி, “சேர்ந்தோர்க் கரணம்” என்றார். 14 - 19. பல்வேறு .............. கடனே. உரை : பல் வேறு வகைய நனந்தலை - நாடும் காடும் அவலும் மிசையுமெனப் பல்வேறு வகைப்பட்ட அகன்ற நாடுகளிலிருந்து; ஈண்டிய வந்து தொக்கனவும் ; மலையவும் கடலவும் - மலையிடத்தனவும் கடலிடத்தனவுமாகிய ; பண்ணியம் பகுக்கும் ஆறு - செல்வப் பொருள்களை அறம் முதலிய துறைகளில் வகுத்துச் செய்யும் இறைமாட்சியால் ; அறம் முட்டுறாது புரிந்தொழுகும் செய்தற்குரிய அறங்கள் குன்றாமல் செய்தொழுகும் ; நாடல் சான்ற துப்பின் - பகைவர் ஆராய்தற் கமைந்த வலி பொருந்திய ; பணைத்தோள் - பருத்த தோளையுடைய ; நினக்கு - வேந்தனாகிய நினக்கு ; பாடு சால் நன்கலம் தரூஉம் நாடு புறந்தருதலும் கடன் - பெருமையமைந்த உயர்ந்த செல்வங்களைத் திறையாக நல்கும் நாடுகளைக் காத்தலும் கடனாதலால் எ - று. ஈண்டியவும் மலையவும் கடலவுமாகிய பண்ணியம் என இயைக்க. இனி, நனந்தலை யீண்டிய, பல்வேறு வகைய பண்ணிய மென்றுமாம், பண்ணியமென்றது, பொதுவருவாயாகிய பண்டங்களென்றும், நன்கலனென்றது, அவற்றுட் சிறப்புடைய மணி முதலாயின வென்றும் கொள்க. இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என்ற நால்வகை அரசியற் செயல்களுள், வகுத்தலால் அரசு மாட்சி யெய்துவது பற்றி, “பண்ணியம் பகுக்கும் ஆறு” என்றார். இவ்வாறு பகுக்குமிடத்து, அறம் பொருள், இன்பம் குறித்துப் பகுத்தல் அறமாதல் கண்டு, அது செய்தொழுகும் வேந்தனை, “பகுக்கும் ஆறு முட்டுறாது அறம் புரிந்தொழுகும் நினக்கு” என்றார். இனிப் பழைய வுரைகாரர், ஈண்டிய பண்ணிய மென்றியைத்து, “நனந்தலை யென்றது பர மண்டலங்களை” யென்றும், “அம் மண்டலங்களில் |