4 - 12. மிஞிறு ......................... சாயினத்தானே. உரை : புறம் மிஞிறு மூசவும் - புறத்தே வண்டினம் மொய்த்து நிற்கவும் ; தீஞ்சுவை திரியாது - தீவிய சுவையில் மாறுபடாமல் ; அரம் போழ்கல்லா மரம்படு தீங்கனி - அரிவாளால் அறுக்க மாட்டாத மரத்தில் உண்டாகிய இனிய கனியாகிய ; அம் சேறு அமைந்த - அழகிய தேன் நிறைந்த ; முண்டை விளை பழம் - முட்டை போன்ற முதிர்ந்த பழங்கள் ; ஆறு செல் மாக்கட்கு ஓய்தகை தடுக்கும் வழிச் செல்வோர்க்கு உணவாகி அவர்தம் வழி நடந்த களைப்பைப் போக்கும் ; மறா அ விளையுள் - மாறாத விளைவினை நல்கும் வயல்களால் ; அறா அ யாணர் - நீங்காத புதுவருவா யினையுடைய ; தொடைமடி களைந்த சிலையுடை மறவர் - அம்பு தொடுப்பதில் மடிதலில்லாத வில்லையுடைய வீரர்கள் ; பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி வரும் - பொங்குகின்ற சிறு நுண்திவலைகளை யெறியும் அலைகளோடு படிகின்ற மேகத்தோடும் கலந்துவரும் ; கடல் ஊதையின் பனிக்கும் - கடற்காற்றால் குளிர் மிக்கு நடுங்கும் ; துவ்வா நறவின் சாய் இனத்தான் - நறவென்னும் ஊரின்கண்ணே சாயலையுடைய மகளிர் கூட்டத்தே யுள்ளான் எ - று. தடுக்கும் நறவு என்றும், அறாஅ யாணர் நறவு என்றும், ஊதையிற் பனிக்கும் நறவு என்றும் இயையும். நறவு, ஓர் ஊர். நற வென்பது உண்ணப்படும் கள்ளிற்கும் பெயராதலால், அதனின் நீக்குதற்குத் “துவ்வா நறவு” என்றார் . இது வெளிப்படை . மரம்படு தீங்கனியாகிய முண்டை விளை பழம் என்க . எதுகை நோக்கி, முட்டையென்பது முண்டையென மெலிந்து நின்றது . மணத்தால் பழத்தையடைந்த வண்டினம், அதன் உறுதியான தோலைக் கிழித்து உள்ளிருக்கும் சேற்றை யுண்ண மாட்டாமையின் புறத்தே மொய்த்தன வென்றற்கு, “மிஞிறு புறம் மூசவும்” என்றார். வலிய தோலால் புறத்தே மூடப்பட்டு வண்டின மூசிய வழியும் உள்ளிருக்கும் பழத்தின் சுவை திரியாமையின், “தீஞ்சுவை திரியாது” என்றார் . திரியாது என்ற வினையெச்சம் விளை பழம் என்பதில் விளைதல் என்னும் வினை கொண்டது . மரம்படு தீங்கனி என்புழிப் படுதல் என்னும் வினையொடு முடிப்பினுமமையும் இனி, இத் தீங்கனி விளையும் மரத்தின் மாண்பு கூறுவார், “அரம் போழ்கல்லா மரம்” என்றார். பழையவுரைகாரரும், “மிஞிறு புறம் மூசவும் தீஞ்சுவை திரியாமை அப் பழத்தின் புறத்து வன்மையால்” என்றும், “அரம் போழ்கல்லா வென்றது, புறத்து வன்மையால், அரிவாளும் போழமாட்டா வென்றவாறு” என்றும், “அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி என்றது, புறக்காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்” கென்றும், “இச் சிறப்பானும் முன்னும் பின்னும் வந்த அடைச் சிறப்பானும் இதற்கு மரம்படு தீங்கனியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். அஞ்சேறு, அழகிய தேன் . இக் காலத்தில் பழத்தின் சேற்றைப் பழச்சாறு என்பர். அழகு, இனிமை, அமைதல், நிறைதல், சேறு நிறையாவழிக் |