மனம் இரங்குவதிலன் ; ஈத்தொறும் மகிழான் - இடையறாது ஈதலால் இசை மிகுவது காரணமாக மகிழ்ச்சி யெய்துவதும் இலன் ; ஈத்தொறும் மா வள்ளியன் என - ஈயும் போதெல்லாம் பெரிய வள்ளன்மை யுடையன் என்று ; நுவலும் நின் நல்லிசை தர வந்திசின் - உலகோர் கூறும் நினது நல்ல புகழ் எம்மை நின் பால் ஈர்ப்ப வந்தேன் ; காண் எ - று. பகைவரைப் பொருது அவர் குருதி படிந்து கிடக்கும் வாட்படையும், அவரைத் தம் கோட்டாற் குத்திக் குருதிக்கறை படிந்திருக்கும் களிற்றுப் படையும் சூழ்தலால் பாசறை புலால் நாறுதல்பற்றி, “புலாஅம் பாசறை” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “புலாஅம் பாசறை யென்றது, வீரரெல்லாரும் போர்செய்து புண்பட்ட மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே யிதற்குப் புலாஅம் பாசறையென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இனி, இதற்கு “ஒள்ளிய வாளால் வெட்டப்பட்ட வன்மையையுடைய களிறுகளையுடைய புலால் நாற்றம் வீசும் பாசறை” யென்பர் உ. வே. சாமிநாதையர். வேந்தனது வேற்படை கறை போக்கி யராவி நெய் பூசப்பெற்று வெள்ளொளி திகழ விருத்தலால், “நிலவி னன்ன வெள்வேல்” என்றார். அவன் வென்றி பாடுமிடத்து வேல் முதலிய படைகளைப் பாடுதலும் மரபாதலின் “வெள்வேல் பாடினி” யென்றார். “பிறர் வேல் போலாதாகி யிவ்வூர், மறவன் வேலோ பெருந்தகையுடைத்தே” (புறம். 332) என்றற்றொடக்கத்துப் புறப்பாட்டால் வேல்பாடும் மரபுண்மை காண்க. வேல் பாடினி, வேலைப்பாடும் பாடினி யென்க. “வேலையென இரண்டாவது விரித்துப் பாடினியிற் பாடுதலொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர். முழவிற் போக்குதலாவது, முழவிசைக் கேற்பத் தாளம் அறுத்திசைத்தல். பாடியாடு மிடத்துக் கையால், பிண்டி, பிணையல், தொழிற்கை முதலிய அவிநயமின்றி இசைக்குத் தாளமிடுவ தொன்றே செய்தலின், “வெண்கை” யென்றார் பழையவுரையும், “வெண்கை யென்றது பொருள்களை அவிநயிக்கும் தொழிற்கையல்லாத வெறுமனே தாளத்திற் கிசைய விடும் எழிற் கையினை” யென்று கூறுதல் காண்க. பாசறைக்கண் வேந்தன் வீற்றிருந்த திருவோலக்கம் விழவுக்களம் போன்றமையின், “விழவி னன்ன கலி மகிழ்” என்றார். “கலி மகிழென்றது, கலி மகிழையுடைய ஓலக்கத்தை” யென்பது பழையவுரை. மாவண் பாரி வாராச் சேட்புலம் படர்ந்தமையின் புரப்பாரையின்றி இன்மையால் வருந்தி “எம்மைக் காத்தளிப்பாயாக” என்று நின்னை இரக்க வந்தே னில்லை யென்பார், “அளிக்கென இரக்கு வாரேன்” என்றும், என் குறையையாதல் நின் புகழையாதல் குன்றவும் மிகை படவும் கூறே னென்பார், “எஞ்சிக் கூறேன்” என்றும் கூறினார். கற்றோரை யறிந்தேற்றுப் புரக்கும் வேந்தர் பலர் உளராயினும், அவரவர் வரிசை யறிந்து ஈவோரை நாடிச் சேறல் தமக் கியல்பாதலால், “இரக்கு வாரேன்” என்றார். “வரிசை யறிதலோ வரிதே பெரிதும், ஈத லெளிதே மாவண் டோன்றல், அது நற் கறிந்தனை யாயின், பொது நோக் கொழிமதி புலவர் மாட்டே” (புறம். 121) என்று அவர் திருமுடிக் |