உடல் நன்கு வணங்கிப் பணிதலைக் “குடந்தம்பட்டு” (முருகு. 229) என்பது போல. பிறரும் “பணிந்து திறைதருப நின் பகைவராயின்” (பதிற். 59) என்பது காண்க. 13 - 19. புல்லுடை ...................... நாடே. உரை : புல்லுடை வியன் புலம் - புல் நிறையவுடைய அகன்ற புலத்தின்கண் ; பல் ஆ பரப்பி - பலவாகிய ஆனிரைகளைப் பரந்து மேயவிட்டு ; வளன் உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த - வளப்பத்தையுடைய வயலின்கண் விளைந்த கதிரினின்றும் உதிர்ந்த ; களன் அறுகுப்பை - களத்திற் சேர்த்துத் தூற்றப்படுவதில்லாத நெல் மணியின் குவியலை, காஞ்சிச் சேர்த்தி - காஞ்சிமரத்தின் அடியிலே சேரத் தொகுத்து வைத்து ; அரியல் ஆர்கை வன் கை வினைஞர் - கள்ளுண்டலையும் வலிய கையினையுமுடைய உழவர் ; அரு வி ஆம்பல் மலைந்த சென்னியர் - அரிய பூவாகிய ஆம்பலைச் சூடிய தலையினையுடையராய் ; ஆடுசிறைவரிவண்டு ஓப்பும் - அசைகின்ற சிறகையும் வரிகளையுமுடைய வண்டினம் அவ்வாம்பலை மொய்க்காவாறு ஓச்சும் ; அவர் அகன்றலை நாடு - அப்பகைவருடைய விரிந்த இடத்தையுடைய நாடுகள் ; பாடல் சான்ற - புலவர் பாடும் புகழ் பெற்றனவாகும் எ - று. ஆனிரை மேய்ப்போர் அவற்றைப் புல்லுள்ள விடத்தே மேய விட்டுத் தாம் ஒரு புடையில் இருப்ப வாதலின், “புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பி” யென்றார். மிக்க மணிகளோடு கூடிய கதிர்களையுடைமை தோன்ற, “வளனுடைச் செறு” என்றும், அக்கதிரினின்றும் உதிர்ந்தவற்றை, நெல்லரியுந்தொழுவர் கொள்வதி்ல்லை யாகலின், அறுவடை முடிந்தபின், உழவரும் ஆனிரை மேய்ப்பாரும் உதிர்ந்து கிடக்கும் அவற்றைத் துடைப்பத்தாற் கூட்டித் தொகுப்பது இயல்பாதலால், “விளைந்தவை யுதிர்ந்த குப்பை” யென்றும், இக்குப்பை களத்தில் தொகுத்துக் கடாவிட்டுத் தூற்றும் அத்துணை மிகுதியும் தகுதியுமுடையவல்ல வாதலின், “களனறு குப்பை” என்றும் கூறினார். இனி, விளைந்தவை யுதிர்ந்தனவும், களத்திடத்தே ஒதுக்கப்பட்டனவுமாகிய நென்மணியின் குப்பையென வுரைப்பினுமமையும். இவற்றைக் காஞ்சிமரத்தின் நிழலிலே தொகுத்தது, அம்மரங்கள் மிகுதியாக இருப்பதனால் என அறிக. இவ்வாறு தொகுத்த நென்மணிகளை அரியல் விற்பார்க்குக் கொடுத்து அரியலைப் பெற்று உண்பர் என்றற்கு, “அரியலார்கை வினைஞர்” என்றார். உழவர்க்குப் பகடு வேண்டியிருத்தலால், ஆனிரை மேய்த்தலும் ஒரோவழித் தொழிலாதலுணர்க. அரியல், கள். இவ்வண்ணம் தமக்கு வேண்டிய அரியலுக்காக, நெல்மணிகளை அரிது முயன்று தொகுத்தமைக்கும் வன்மை தோன்ற, “வன்கை வினைஞர்” என்றார். அரு வீ ஆம்பல், என்பது அரு வி யாம்பலெனக் குறுகிற்று. நெல்லரியுமிடத்து வயலிடத்து நீரை வடித்து விடுதலின், ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் அரியவாதலின், “அருவியாம்பல்” என ஓதுவாராயினர். இதற்குப் பிறரெல்லாம் வேறுபடக் கூறுவர் வினைஞர் சென்னியராய் வண்டோப்பும் |