இதுவுமது. பெயர் : அரு வி யாம்பல். 1 - 7. பார்ப்பார்க்கல்லது ......... பொய்ப்பறி யலையே. உரை : பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலை - பார்ப்பாரையன்றிப் பிறரைப் பணிதல் இல்லாய் ; பணியா உள்ளமொடு அணிவரக்கெழீஇ - இவ்வாறு பணியாத மனவெழுச்சியால் அழகுறப் பொருந்தியும் ; நட்டோர்க் கல்லது - உயிரொத்த நண்பர்க் கல்லது ; கண் அஞ்சலை - பிறர்க்குக் கண்ணோடி அஞ்சுவது இல்லாய் ; வணங்கு சிலை பொருத நின் மணங் கமழ் அகலம் - வளைந்த இந்திர வில் போலும் மாலை கிடந்தலைக்கும் சாந்துபூசி மணங் கமழும் நின் மார்பை ; மகளிர்க் கல்லது மலர்ப்பு அறியலை - உரிமை மகளிர்க்கு இன்பந் தருதற்கு விரித்துக் காட்டுவதன்றிப் பிற பகைவர்க்குக் காட்டுவதில்லாய் ; நிலம் திறம் பெயரும் காலையாயினும் - நிலவகைகள் தம் இயல்பில் திரிந்து நெடுங்காலமெய்தினும் ; கிளந்த சொல் - வாயாற் சொல்லிய சொல் ; நீ பொய்ப்பு அறியலை - பொய்படுவதை நீ அறியாய் எ - று. பார்ப்பனராவார் ஓதல் முதலிய அறுவகை யொழுக்கங்களையுடையோர். அவர்க்குப் பணியவேண்டுமென்பது பண்டையோர் கொள்கை. “இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த, நான்மறை முனிவ ரேந்துகையெதிரே” (புறம். 6) என்று பிறரும் கூறுதல் காண்க. எனோர்க்குப் பணியாமை மானமாதலின், “பணியா வுள்ளமொடு” என்றார். அவ்வுள்ளம் மானமுடைய அறவேந்தர்க்கு அழகு செய்தலின், “அணிவரக் கெழீஇ” என்றார். பணியா வுள்ளமு டையார்க்கு அச்சம் பிறவாதாயினும், உயிரொத்த நண்புடையாரைக் கண்ணோட்டத்தால் அஞ்சுவரென்பது தோன்ற நிற்கும் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கண்ணஞ்சல், கண்ணோட்டத்தால் அஞ்சுதல். ஒடு, ஆனுருபின் பொருட்டு. தார், வணங்கிய சிலை போறலின் “வணங்கு சிலை” யென்றும், மகளிர் முயக்கத்தால் மலைத்தவழி விரித்துக் |