யென்பதுபட நிற்றலின், தில், ஒழியிசைப் பொருட்டு. பழையவுரைகாரரும் தில் ஒழியிசை யென்றே கூறுவர். 3 - 11. அறங் கரைந்து ............... அவ்வயின். உரை : அறம் கரைந்து வயங்கிய நாவின் - அறநூல்களை ஓதிப் பயின்று விளங்கிய நாவினையும் ; பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி - உயர்ந்த புகழமைந்த வேள்விகள் பல செய்து முடித்தற்கேதுவாகிய கேள்வியினையுமுடைய ; அந்தணர் அருங்கலம் ஏற்ப - அந்தணர்கள் அரிய கலன்களை நீர்வார்த்துக் கொடுக்கப் பெறுவதால் ; நீர் பட்டு இருஞ்சேறாடிய - அந் நீரொழுகி மிக்க சேறாகியதால் ; களிறுநிலை முணைஇய - களிறுகள் நிற்பதற்கு வெறுத்த ; மணல் மலிமுற்றத்து - மண் நிறைந்த முற்றத்தையும் ; தார் அரும் தகைப் பின் - ஒழுங்காக அமைந்த பரிசிலரன்றிப் பிறர் செல்லுதற்கரிய காப்பையுமுடைய ; அவ்வயின் - அவ்விடத்து நின் பெருமனைக்கண்ணேயிருந்து ; வயிரியர் புறஞ்சிறை காணின் - கூத்தர்கள் புறஞ்சிறையிடத்தே வரக் காணினும் ; வல்லே - தாழ்க்காது ; எஃகு படை யறுத்த கொய் சுவற் புரவி வேல்வாள் முதலிய படைவீரரை வென்று கொணர்ந்த கொய்யப்பட்ட பிடரியினையுடைய குதிரைகளையும் ; அலங்கும் பாண்டில் - அசைகின்ற தேர்களையும் ; இழையணிந்து ஈம் என அவ்வவற்றுக்குரிய அணியணிந்து கொடுமின் என்று ஏவி ; ஆனாக் கொள்கையை யாதலின் - ஈகையில் அமையாத கொள்கையையுடையை யாதலினாலே எ - று. பாசறைக்கண்ணே சென்று வேந்தனைக் காண்கின்றா ராதலால், அவன் தன் அரண்மனையிடத்தே யிருந்து செய்யும் ஈகை வினையை இப்பகுதியால் விளக்குகின்றார். பாசறையை நோக்க, அரண்மனை அவ்விடமெனச் சுட்டப்படுமாகலின், “அவ்வயின்” என்றார். அரண்மனைக்கு முன்னே மணல் மலி முற்றமும் அதன்பின் தாரருந் தகைப்பும் உண்மையின் அம்முறையே கூறுகின்றார். உவளகத்துக்கும் மணன் மலி முற்றத்துக்கும் இடையது தாரருந் தகைப்பென்பதாம். தன்பாற் போந்து ஏற்ற பார்ப்பார்க்கு அவர் வேண்டும் அருங்கலங்களை நீர் பெய்து கொடுப்பதால், அந் நீரொழுகி மணல் மலி முற்றத்தைச் சேறாக்கி விட்டதென்பார், “அந்தணர் அருங்கல மேற்ப நீர்பட்டு இருஞ்சே றாடிய மணல்மலி முற்றத்து” என்றார். களிறு நிலை முணை இய மணல் மலி முற்றம், இருஞ்சே றாடிய முற்றம் என இயைக்க. இருஞ்சே றாடியதனால் களிறுகள் நிற்றற்கு விரும்பா வாயின வென்பார், “களிறு நிலை முணைஇய” என்றார். பழையவுரைகாரரும், “களிறு நிலை முணவுதற்குக் காரணம் இருஞ்சே றாடுதல்” என்பது காண்க. இனி, ஏற்கும் பார்ப்பார்களின் தகுதி கூறுவார், அவர் அருமறைப் பொருளைக் கற்றும் கேட்டும் ஒழுகும் நல்லொழுக்க முடைய ரென்றற்கு, அவரது நாவையும் கேள்வியையும் சிறப்பித்தார், “அறங்கரைந்து வயங்கிய நாவின்” என்றது கல்விச் சிறப்பையும், “பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி”யென்றது கேள்விச் சிறப்பையும் சுட்டி நின்றன. அறநூல்களையே |