ஓதுதலும் ஓதுவித்தலும் செய்தலால் நன்கு பயின்றவர் என்றற்கு “அறங்கரைந்து வயங்கிய நாவின்” என்றார். பார்ப்பார்க்குப் புகழ், அவர் செய்துமுடிக்கும் வேள்வியொன்றே குறித்து நிற்றலின், “பிறங்கிய வுரைசால் வேள்வி” யென்றும், வேள்வி பலவும் செய்து முடித்தற்குக் கேள்வி” யென்றும், வேள்வி பலவும் செய்து முடித்தற்குக் கேள்வி எதுவும் பயனுமாதலின், “வேள்வி முடித்த கேள்வி” யென்றும் கூறினார். இனி, “உரைசால் வேள்வி யென்றது, யாகங்கள் எல்லாவற்றினும் அரியவும் பெரியவுமாக வுரையமைந்த வேள்வி” யென்றும், வேள்வியை இவ்வாறு உரையமைந்த வேள்வியென வுரைத்த சிறப்பினால் இப் பாட்டு “உரைசால் வேள்வி” யெனப்படுவதாயிற் றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். வீரர் உள்ளும் புறமும் இருந்து ஒழுங்குறக் காப்ப வேந்திருந்து ஈகை வினை புரியுமிட மாதலின், “தாரருந் தகைப்பு” என்றார். தார், ஒழுங்கு. தகைப் பென்பதே கடமனை யென்னும் பொருட்டாயினும், அருந்தகைப்பென்றது. ஏற்க வரும் இரவலரையும், நன்கு ஆராய்ந்து காக்கும் காப்பு மிகுதி குறித்து. இரவலரும் பரிசிலரும் வாரா தொழியாமைப் பொருட்டு ஈதற்குரியாரைப் புறஞ்சிறை யிடத்தே நிறுவி, கூத்தர் முதலிய பரிசின்மாக்கட்கு வேண்டுவ ஈயுமாறு ஏற்பாடு செய்துள்ளமை தோன்ற, “புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே, எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி, அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென, ஆனாக் கொள்கையை” என்றார். பகைப் புலத்தே கொண்ட புரவி யென்றற்கு “எஃகு படை யறுத்த கொய் சுவற் புரவி” யென்றும், அவை ஈர்த் தேகுதற்கெனத் தேரும் சிறப்ப வழங்குக என்றற்கு “அலங்கும் பாண்டில், இழையணி்ந் தீமென” என்றும் கூறினார். பாண்டில், தேர். இனிப் பழைய வுரைகாரர், “தாரருந் தகைப் பென்றது, ஒழுங்குபாட்டையுடைய ஆண்டு வாழ்வார்க்கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டண” மென்றும், “தார் - ஒழுங்கு ; தகைப்பு, கட்டணம் ; புறஞ்சிறை, அதன் சிறைப்புறம் ; எஃகு படை - கூரிய படை ; பாண்டில், தேர் பூணும் எருதுகள்” என்றும், “புறஞ்சிறை வயிரியர்க் காணின் ஈம் என்றது, நம்மை யவர்கள் காணவேண்டுவதில்லை, நம் மாளிகையிற் புறத்து நீயிர் காணினும் கொடுமின் என்றவா” றென்றும், “ஈமென்றது அவ்வீகைத் துறைக்குக் கடவாரை”யென்றும், “அவ்வயி னென்றது நின்னூரிடத் தென்றவா” றென்றும், “ஈமென அவ்வயின் ஆனாக் கொள்கையை யாதலின் என மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இவ்வாறு தன் அரண்மனை யகத்தும் புறத்தும் தானும் தன் பரிசனமும் ஈகைவினைக்கண் ஊன்றி நிற்பினும், அவ்வளவில் அமையாது, மேலும் அதனையே விழைந்து நிற்கும் நிலையை வியந்து, “ஆனாக் கொள்கையை” என்றார். ஆதலின் என்பதை “மழையினும் பெரும் பயம் பொழிதி” (18) என்பதனோடு இயைக்க. 12 - 20. மாயிரு .................. பாசறையானே. உரை : மா யிரு விசும்பில் - கரிய பெரிய வானத்தே ; ஞாயிறு தோன்றி - ஞாயிறு எழுந்து தோன்றி ; பன்மீன் ஒளி கெட ஆங்கு - |