பலவாகிய விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தாற்போல ; மாற்றார் உறுமுரண் சிதைத்த - சேரர்குடியி்ல் தோன்றிப் பகைவரது மிக்க மாறுபாட்டைக் கெடுத்த ; கழல் தொடி அண்ணல் - கழலுமாறு அணிந்த தொடியினையுடைய அண்ணலே ; மை படு மலர்க்கழி மலர்ந்த நெய்தல் இதழ் வனப்புற்ற தோற்றமொடு - கரிய நிறம் பொருந்திய விரிந்த கழியிடத்தே மலர்ந்த நெய்தற்பூவின் இதழினது அழகிய நிறத்தோடு ; உயர்ந்த மழையினும் - உயர்ந்தெழுந்த மழை முகிலினும் ; பெரும் பயம் பொழிதி - மிக்க செல்வத்தை வழங்குகின்றாய் ; அதனால் - அது காரணமாக, பசியுடை ஒக்கலை ஒரீஇய இசைமேந் தோன்றல் - பசியுடைய சுற்றத்தாரை அப்பசியின் நீக்கியதனால் புகழ் மேவிய தோன்றலே ; நின் பாசறையான் - நினது பாசறைக்கண்ணே ; நின் நோன் றாள் வாழ்த்தி - நின்னுடைய வலிய தாளை வாழ்த்தி ; காண்கு வந்திசின் - நின்னைக் காணவேண்டி வந்தேன் எ - று. கெடுத் தென்பது கெட வென நின்றது. விசும்பில் ஞாயிறு தோன்றி்ப் பன் மீன் ஒளி கெடுத்தாங்கு என இயைக்க. பொருட் கேற்ப, உவமை மாறியியைக்கப்பட்டது. ஞாயிற்றின் தோற்றமும் அதற்குரிய இடமும் கூறியதற்கேற்ப, வாழியாதன் தோற்றமும் அதற் கிடனாகிய சேரர் குடியும் வருவிக்கப்பட்டன. பன்மீ னென்றதனால், மாற்றாரது பன்மை பெற்றாம். பலரும் ஒருங்குதிரண்டு இகல்செய்தமையின், “உறுமுரண்” என்றார். மாற்றாரது பன்மையும் உறு முரணும் கண்டு அஞ்சாது பொரு தழித்தமையின், நின் தாள் வாழ்த்துதற் குரித்தாயிற் றென்பார், “நின் நோன்றாள் வாழ்த்தி” யென்றார். மாற்றார் முரண் சிதைத்த அண்ணல், நீ பெரும் பயம் பொழிதி ; அதனால், தோன்றல், நின் பாசறையானே, காண்கு வந்திசின் என இயைத்து முடிக்க. கரிய சேறுபடிந் திருத்தல் பற்றிக் கழியை, “மைபடு மலர்க்கழி” யென்றார். மலர்க்கழி, விரிந்த கழி. இனி, மலர்களை யுடைய கழியென்றுமாம் கழியிடத்தே மலர்ந்த நெய்தற்பூவின் இதழ் வண்ணங் கொண்டு எழுந்த முகிலெனவே, கருமுகில் என்பது பெற்றாம். “மழையினும் பெரும் பயம் பொழிதி” யெனச் சேரமானது கொடைநலத்தைச் சிறப்பித்தது, “ஆனாக்கொள்கையை” (11) என்று முற்கூறியதனை வற்புறுத்துநின்றது. இக் கொடையால் விளைந்த பயன் இதுவென்பார், பசியுடை யொக்கல் இலராயினா ரென்றும், நல்லிசை மேவுவதாயிற்றென்றும் கூறினார். ஒரீஇய : பிறவினைப் பொருட்டு மேவு மென்பது ஈற்றுமிசை யுகரம் மெய்யொடும் கெட்டு நின்றது. ஞாயிற் றுவமம் வினை பற்றியும், மழை யுவமம் கொடை பற்றியும் வந்தன. நெய்தலின் இதழ் மழைமுகிலின் நிறத்தைச் சிறப்பிப்ப, அந் நிறத்தையுடைய முகில் சேரனது கொடையைச் சிறப்பித்தலின், அடுத்து வரலுவமையென்னும் குற்றமின்மை யறிக. இனிப் பழைய வுரைகாரர், “நெய்தல் இதழ் வனப்புற்ற தோற்றமொடு பயம் பொழிதி யெனக் கூட்டி, இவன்றன் நிறம் கருமையாக்கி, அந் நிறத் தோற்றத்தானும் மழையோடு |