கொல்படை, கொல்லுதற்குரிய வேலும் வாளும் பிறவுமாம். தெரியவெனவே, ஏந்திய படை போர்த்தொழிலில் முரிந்தழிந்தமை பெற்றாம். இனிப் பழைய வுரைகாரர், 1”சொட்டையாளர் படைதெரிய வென ஒரு சொல் வருவிக்க” என்பர் . செய்யும் போர்களிலெல்லாம் வென்றியே எய்துதலின், “வெல்கொடி நுடங்க” என்றார் ; பழைய வுரைகாரர், “ வெல்கொடி நுடங்க வென்றது மாற்றாரெதிரே அவர் கண்டு நடுங்கும்படி பண்டு வென்ற கொடி நுடங்க வென்றவா” றென்பர் . வயிர், கொம்பு என்னும் இசைக்கருவி. இது “விரிக்கும் வழி விரித்த” லென்பதனால் அம்முப் பெற்று வயிரமென நின்றது. இது வளையொடு இணைத்தே கூறப்படுதல் இயல்பாதலின், “வயங்கு கதிர் வயிரமொடு வலம்புரி யார்ப்ப” என்றார் . இக் கொம்பு வயிரத்தை யுடைய மரத்தாற் செய்து ஒளி திகழக் கடைச்சலிடப்படுமாறு தோன்ற, “வயங்குகதிர் வயிர” மென்றார் போலும் . “திண்காழ் வயிரெழுந் திசைப்ப” (மருகு. 119) என்று பிறரும் கூறுதல் காண்க. இதனோசை மயிலினது அகவலோசையையும் அன்றிலின் குரலையும் ஒத்திருக்கு மென்பர். யானைகள் இயல்பாகவே தம்மில் அணியணியாக நிரை வகுத்துச் செல்லும் சிறப்புடையவாகலின், அவற்றின் குழுவினை நிரை யென்றே சான்றோர் வழங்குப . அவ்வழக்கே ஈண்டும் “பல்களிற் றினநிரை” யெனக் கூறப்படுகிறது . இவை போர்த்துறை பயின்றவையாதலின், போர் நிகழும் இடம் நோக்கிப் பெயர்ந்து சென்றுகொண் டிருப்பது தோன்ற, “புலம் பெயர்ந்து இயல்வர” என்றார் . பழைய வுரைகாரரும் “களிற்றின்நிரை களத்திலே போர்வேட்டுப் புடை பெயர்ந்து திரிய என்றவா” றென்பர். அமர்க்கண் அமைந்த பரப்பு, நிணம் அவிர் பரப்பு என இயையும் . நான்காவதன்கண் ஏழாவது மயங்கிற்று ; நிணமவிர் என மாறுக. நிண மென்றதற் கேற்ப இயைபுடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. பழையவுரைகாரர், “அமர்க்கண் அமைந்த பரம்பென்றது அமர் செய்யும் இடத்திற்கு இடம் போந்த பரப்” பென்பர் . இனி, கண்ணென்பதனை இடமாக்கி, அமர்செய்யு மிடமெனக் கோடலுமொன்று . நிணம் மிக்கு மலையெனக் குவிந்து கிடக்குமாறு தோன்ற, “நிணமவிர் பரப்” பென்றார் . நிணமும் ஊனும் தின்ற பருந்துகட்கு உடலினின்று சொரிந்தோடும் குருதியே உண்ணுநீரானமையின், “குழூஉச் சிறை யெருவை குருதி யார” என்றார் ; “குருதிபடிந்துண்ட காகம்” (கள. 1) என்று பிறரும் கூறுதல் காண்க குழூஉ வாகிய எருவை யென்க. தலை வெட்டப்பட்ட வழி எஞ்சி நிற்கும் முண்டம் (கவந்தம்) துள்ளியாடுதற்கு ஏதுக் கூறுவார், “ஆண் மலி யூப” மென்றார். யூபம், தூண் . ஈண்டு அது கவந்தத்துக்காயிற்று. உடலை நெறிப்படுத் தியக்கும் தலையொழியினும், அவ்வுடற்கண் கிளர்ந்து நின்ற ஆண்மைத் துடிப்பு உடனே ஒழியாமைபற்றி, “ஆண்மலி” யென்றா ரென்க. பழையவுரையும், “ஆண்மை மிக்க யூப” மென்றே கூறுகிறது. பேய்மகளைச் சவந் தின் பெண்டு என்றலும் வழக்கு. உலறிய தலையும், பிறழ் பல்லும், பேழ் வாயும், சுழல் விழியும், சூர்த்த நோக்கும், பிணர் வயிறும் உடையளாதலின், “உருவில் பேய்மகள் என்றும், அவள் தோற்றம் காண்பார்க்கும் பேரச்சம் தந்து நெஞ்சு நோவச் செய்தல்பற்றி |