“கவலை கவற்ற” என்றும் கூறினார். கவலை : பெயர், கவல்வித்தற் பொருட்டாய கவற்றல், வினை. போரில் ஈடுபட்டார்க்கன்றி நாட்டிடத்தே யிருக்கும் மக்களனை வர்க்கும் பேரிழவும் பெருந் துன்பமும் உண்டாதலால், “நாடுடனடுங்க” என வேண்டாது கூறினார். உண்டாகிய போர் பலவற்றினும் மீட்டும் போருண்டாகாவாறு அதற் கேதுவாயினோரை வேரறக் கொன்று வென்றி யெய்தியது தோன்ற, “பல செருவென்” றென்னாது, “கொன்” றென்றாரென வறிக. படையழிந்தவர் படை தெரிய, கொடி நுடங்க, வயிரமொடு வலம்புரியார்ப்ப, இனநிரை இயல்வர, எருவை குருதியார, யூபமொடு பேய்மகள் கவலை கவற்ற, நாடு நடுங்க, பல்செருக் கொன்று என இயைத்து, மேல்வரும் “மெய் சிதைந்து, மறைத்த சான்றோர்” (18) என்பதனோடு கூட்டிக்கொள்க. இனிப் பழைய வுரைகாரர், “கொல் படை யென்பது முதல் இய்ல்வர என்பது ஈறாக நின்ற வினையெச்சம் நான்கினையும் நிகழ்காலப் பொருட்டாக்கிச் செருக்கொன்று என்னும் வினையொடு முடிக்க” என்றும், “குருதியாரப், பேய்கள் கவலை கவற்ற, நாடுடன் நடுங்க என நின்ற வினையெச்சங்கள் மூன்றனையும், ஆரும்படி, கவலை கவற்றும்படி, நாடுடன் நடுங்கும்படி யென எதிர்காலப் பொருட்டாகிக் கொன்றென்னும் வினையொடு முடிக்க” என்றும், கொன்றென்றும் வினையெச்சத்தினை மெய் சிதைந்து என்னும் வினையொடு மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். 13 - 18. நாறிணர் .............. பெருமகன். உரை : நாறுஇணர்க்கொன்றைவெண்போழ்கண்ணியர் - மணம் கமழ்கின்ற கொன்றைப்பூவின் கொத்துக்களை விரவித்தொடுத்த வெள்ளிய பனந்தோட்டாலாகிய கண்ணியினையுடையராய் ; வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் - வாளின் வாய் உண்டு பண்ணிய மாட்சிமைப்பட்ட வடுக்களாகிய வரி பொருந்திய முகத்தை யுடையராய் ; நெறிபடு மருப்பின் இருங்கண் மூரியொடு - நெறிப்புடைய கொம்பும் பெரிய கண்ணுமுடைய எருத்துக்களோடு ; வளை தலை மாத்த - வளைந்த தலையையுடைய ஏனை விலங்குகளின் இறைச்சிகளையுடைய ; தாழ் கரும்பாசவர் தாழ்ந்த இழிந்த பாசவர் ; எஃகாடு ஊனம் கடுப்ப - கத்தியால் இறைச்சியை வெட்டுதற்குக் கொண்ட அடிமணை போல ; மெய் சிதைந்து - மெய்வடுவும் தழும்பு முறுதலால் ; சாந்து எழில் மறைத்த மெய் சான்றோர் - பூசிய சந்தனத்தின் பொலிவு தோன்றாதபடி மறைத்த மார்பினையுடைய சான்றோர்க்கு பெருமகன் - தலைவனும்; சேரர்க்குச் சிறப்பாக வுரித்தாகிய பனந்தோட்டுடன் உழிஞை, வாகை, தும்பை முதலிய போர்ப்பூவும் பிற பூக்களும் விரவித் தொடுத்தணிவது இயல்பாதலால், கொன்றை கலந்து தொடுத்த போந்தைக் கண்ணியை, “நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணி” யென்றார். வாளால் |