வெட்டுண்டு வடுப்பட்டது வரிவரியாக முதுகொழிய ஏனை முகத்தினும் மார்பினும் காணப்படுவதுபற்றி, “வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்” என்றார். வாள் வாயால் உண்டாகிய புண்ணின் வடுவினை வரியென்றா ராதலின், அதற்கேற்பப் புண்படுத்திய வாளின் செயலை, “வாள்முகம் பொறித்த” என்றும், முகத்தின்கண் உண்டாகிய புண்வடு வீரர்க்கு அழகும் மாட்சிமையும் பயத்தலின், பொறித்தல் என்ற வினைக்கேற்ப வரி யென்றே யொழியாது, “மாண் வரி” என்றும் சிறப்பித்தார். முகத்துக்கும் மார்புக்கும் பொதுவாக யாக்கை யென்றாராயினும், “மெய் சிதைந்து சாந்தெழின் மறைத்த சான்றோர்” என மார்பினைச் சிறப்பித் தோதுதலின் முகத்துக்காயிற்று. பழைய வுரைகாரரும், “மெய் சிதைந்து உடலுருவப் பட்டமை கீழே சொன்னமையால், “வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கைய” ரென்பதற்கு வாள்முகத்திலே பொறித்த மாண் வரியையுடைய யாக்கையரென முகத்தில் வடுவாக்கி யுரைக்க” என்பது காண்க. பாசவர், இறைச்சி விற்பவர.் எருதுகளையும் ஏனை ஆடு மான் முதலிய விலங்குகளையும் கொன்று அவற்றின் இறைச்சிகளை விற்பது பற்றி அவரைத் “தாழ் பாசவர்” என்றும், கொலைவினை யுடைமையால், “கரும் பாசவர்” என்றும் கூறினார். எஃகு, ஈண்டு இறைச்சியைத் துண்டிக்கும் கத்திமேற்று . இறைச்சியைத் துண்டிப்பதற்கு அடியிலே வைக்கும் மரக் கட்டையில் அக் கத்தியின் வெட்டுப்பட்டு மேடு பள்ளமுமாய் வரிபோன்று கிடப்பதுபற்றி, வீரர் மார்புக்கு அதனை உவமம் கூறுவார், “ஊனம் கடுப்ப” என்றார். “ஊனமர் குறடுபோல விரும்புண்டு மிகுத்த மார்பு” (சீவக. 2281) எனப் பிற்காலச் சான்றோர் கூறுவது காண்க . ஊனம், ஊன்கறி வெட்டு மணைக்கட்டை. சிதைந்து, காரணப் பொருட்டாய வினையெச்சம். பூசிய சாந்தம் மார்பின் வடு விளையும் தழும்பினையும் மறைக்கமாட்டாமையின், தன் பொலிவு தோன்றற்கு இடம் பெறாமையால், அச் சாந்தின் பொலிவை மார்பின் சிதைவுகள் மறைத்துத் தாம் மேம்பட்டுத் தோன்ற விளங்கும் மார்பினையுடைய சான்றோர் என்றற்கு, “சாந்தெழில் மறைத்த சான்றோர்” என்றார் இதனாற் பயன், உவகைச் சுவையினும் வீரச் சுவையே மிக விரும்பும் இயல்பின ரென்றவாறு மார்பு என ஒருசொல் வருவித்து, சாந்தெழில் மறைத்த மார்பையுடைய சான்றோர் என இயைத்துரைத்துக்கொள்க. மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த என்றதற்குப் பழையவுரைகாரர், “மெய்யானது சிதைந்து அச் சிதைந்த வடுக்களானே பூசின சாந்தின் அழகை மறைத்த என்றவா” றென்பர். சான்றோர் பெருமகன், உயர்திணை ஆறாம் வேற்றுமைத் தொகை ; “அதுவென் உருபுகெடக் குகரம் வருமே” (தொல். வேற். மயங். 11) என்றதனால் சான்றோர்க்கென விரிக்கப்படுவதாயிற்று . இது, கண்ணியரும் யாக்கையருமாகிய சான்றோர் பெருமகன் என இயையும். 19 - 23. மலர்ந்த ...........................செலினே. உரை : மலர்ந்த காந்தள் - பூத்திருக்கும் காந்தட் பூ ; சூர் நசைத்தா அய் - தெய்வத்தால் விரும்பப்படுவதாதலால் ; மாறாது ஊதிய - நீங்காது படிந்து தாதுண்ட ; கடும் பறைத் தும்பி விரைந்து பறத்தலை யுடைய தும்பியானது ; பறை பண்ணழியும் அப்பறக்கும் இயல்பு கெடும் |