வேறு பிற சான்றோரை விடுத்துத் தெரிவிக்கின்றார்; அவ்வழியும் அவர் தெளிகின்றிலர்; அதுகண்டு வருந்தி, “ஆங்கும் மதிமருளக் காண்குவல், யாங்குரைப் பேனென வருந்துவல் யானே” எனச் சொல்லி வருந்துகின்றார். இரும்பொறைபால் அவர்க்காகப் பரிந்து, “நின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து, நன்றறியுள்ளத்துச் சான்றோ ரன்னநின், பண்பு நன்கறியார் மடம்பெருமையின்” எனப் பேசுகின்றார். இவ்வாறு அவன் வண்மை மிகுதிகண்டு பரிந்துபேசிய அரிசில்கிழார், அவனது அறிவு நலத்தை யுணர்ந்து, அதனால் அவன் செயல்களைப் பாராட்டி, “கேள்விகேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப” எனவும், “சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும், காவற் கமைந்த அரசுதுறை போகிய, வீறுசால் புதல்வற் பெற்றனை” யெனவும் புகழ்கின்றார். கேள்வியாலும் ஒடியாப் படிவத்தாலும் இரும்பொறை யெய்திய உயர்வை, படிவந்தாங்கும் மனத்திட்பமில்லாத நரை மூதாளனைத் தெருட்டி நன்னெறிப்படுத்திய செயலில் வைத்து, முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை, வண்மையும் மாண்பும் வளனு மெச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென, வேறுபடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமையானே” என விளக்குகின்றார். இவ்வாறே இவர் இரும்பொறையின் படைப்பெருமை கூறலும், தகடூர் நூறியது கூறலும், செருவிலும் இரவலர் நடுவிலும் பிறவிடத்தும் இரும்பொறை யிருக்கும் இயல்புநிலை கூறலும் பிறவும் படிக்குந்தோறும் இன்பம் சுரக்கும் பண்பினவாகும். பெருங்குன்றூர்கிழார் : பெருங்குன்றூர் எனப் பெயர் கொண்ட வூர்கள் தமிழ்நாட்டிற் பல உள்ளன; அதனால் இச் சான்றோரது பெருங்குன்றூர் இன்ன நாட்டதென அறுதியிட்டுக் கூறுவது இயலாதாயிற்று. மலைபடுகடாம் பாடிய ஆசிரியரது பெருங்குன்றூர், இப்பெருங்குன்றூர்கிழாரது ஊரின் வேறு பட்டதென்றற்குப்போலும், அவரூரை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் எனச் சான்றோர் தெரித்து மொழிந்தனர். வையாவிக் கோப்பெரும்பேகனை அவன் மனைவி காரணமாகப் பாடிய சான்றோருள் இவரும் ஒருவராவர். இவர் பாடினவாகப் பல பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. இந்நூல் ஒன்பதாம் பத்தால் இவர் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையைச் சிறப்பித்துள்ளார். இளஞ்சேர லிரும்பொறையை இவர் “நிலந்தரு திருவின் நெடியோய்” என்று கூறுவதனால், இரும்பொறை தன் நாட்டு மக்கட்கெனத் தன் நாட்டை விரிவுபடுத்தினனென்று அறியலாம். இவ்வேந்தன் போர்வேட்கை மிக்கு நாளும் போர் புரிவதிலும், |