துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : ஏம வாழ்க்கை. 15 - 20. பாயல் ............ தாணிழலோரே. உரை : பாயல் - இன்மையின் - பிரிவாற்றாது உறக்கம் பெறாமையால் ; பாசிழை - நெகிழ - அணிந்துள்ள பசிய இழைகள் நெகிழ்ந்து நீங்க வுடல் மெலிந்து ; நெடுமண் இஞ்சி - உயரிய மண்ணாற் செய்யப்பட்ட மதில் சூழ்ந்த ; நீள் நகர் வரைப்பின் - நீண்ட பெருமனையிடத்தே ; ஓவு உறழ் நெடுஞ்சுவர் - ஓவியத்தில் தீட்டிக் காட்டப்படுவதினும் மேம்பட்ட நெடிய சுவரில் ; நாள் பல எழுதி - பிரிவின் கண் மீண்டு போந்து கூடுதற்குக் குறித்த நாட்கள் பலவும் எழுதியெழுதி ; செவ்விரல் சிவந்த இயல்பாகவே சிவந்துள்ள விரல் மிகச் சிவந்த ; அவ் வரி - அழகிய வரிகளையும் ; குடைச் சூல் - சிலம்பையும் ; அணங் கெழில் - காண்போரை வருத்தும் அழகையுமுடைய ; அரிவையர்ப் பிணிக்கும் - மகளிர் மனத்தைப் பிணித்து நிற்கும் ; மணங்கமழ் மார்ப - சாந்தின் நறிய மணம் கமழும் மார்பை யுடையோய் ; நின் தாள் நிழலோர் - நின் அடிப்பணி நின்று வாழும் வீரர் எ - று. பாயல், உறக்கம். “படலின் பாயல்” (ஐங். 195) என்புழிப் போல பிரிவுத் துயரத்தை யாற்றாது காதல் மகளிர் பலரும் வருந்துமாறு தோன்ற, “பாய லின்மையின்” என்றும், “பாசிழை நெகிழ” என்றும் கூறினார். இவையிரண்டும் முறையே “கண்டுயில் மறுத்தல்” எனவும், “உடம்பு நனி சுருங்கல்” எனவும் கூறப்படும் மெய்ப்பாடுகளாகும். காதலரைப் பிரிந்த மகளிர் அவர் பிரிந்த நாட்களைச் சுவரில் கோடிட்டுக் குறித்தல் மரபாதலின், “ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதி” என்றார் ; “நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந், தாழல் வாழி தோழி” (அகம். 61) என்று பிறரும் கூறுதல் காண்க. நெடுமண் இஞ்சி யென்புழி, நெடுமை உயர்ச்சி மேற்று. ஓவு, ஓவ மென்பதன் கடைக்குறை இயல்பாகவே சிவந்த விரல் சுவரில் பல நாளும் எழுதுவதால் மிகச் சிவந்து தோன்றுதலால், “செவ்விரல் சிவந்த” என்றார். குடைச்சூல், சிலம்பு. கண்டார் மனத்தே வேட்கை விளைவித்து வருத்தும் இயல்புபற்றி, |