எழிலை “அணங்கெழில்” எனச் சிறப்பித்தார். “நின்னெழில் நலம் ......நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ” (கலி.56) என வருதல் காண்க. காதல் மகளிர் கிடந்துறங்கி இன்புறும் காமக்களனாய் அவரைப் பிரியாமைப் பிணிக்கும் சிறப்புடைமை பற்றி, மார்பை, “அணங்கெழிலரிவையர்ப் பிணிக்கும் மார்பு” என்றார். “வேட்டோர்க் கமிழ்தத்தன்ன கமழ்தார் மார்பு” (அகம். 332) என்றும், “காதலர் நல்கார் நயவாராயினும், பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே” (குறுந். 60) என்றும், “ஊரன் மார்பே, பனித்துயில் செய்யு மின்சா யற்றே” (ஐங். 14) என்றும் சான்றோர் கூறுமாற்றா லறிக. இழை நெகிழ, எழுதிச் சிவந்த அரிவையர், வரியும் குடைச்சூலும் எழிலுமுடைய அரிவையர் என்றும் இயையும். “பாசிழை நெகிழ நாள் பல எழுதி யென முடிக்க” என்பர் பழைய வுரைகாரர். 1 - 4. கால் கடிப்பாக .............. அதிர. உரை : வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் - பகைவர் நாட்டிடத்தே சென்றமைத்துத் தங்கிய பாசறை நடுவில் ; கால் கடிப்பாக - மோதுகின்ற காற்றாகிய குறுந்தடி அலைக்க ; கடல் ஒலித்தாங்கு - கடலாகிய முரசு முழங்கியதுபோல ; கடுஞ்சிலை கடவும் தழங்கு குரல் முரசம் - மிக்க முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது ; அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர - விரிந்த பெரிய வானத் திடத்தே முழங்க எ - று. போர் குறித்துச் செல்லும் செலவினை விதந்தோதுதலின், பாசறையின் நிலைமையைக் கூறுகின்றார். பகைப்புலத்தே சென்று அமைத்த பாசறை யென்றற்கு, “வேறு புலத் திறுத்த கட்டூர்” என்றார். மோதுகின்ற காற்றைக் கடிப்பென்றாற்போலக் கடலை முரசமென்னாமையின், இஃது ஏகதேச வுருவகம். சிலை, முழக்கம் முரசின் முழக்கம் வீரரைப் போர்க்கட் செலுத்தும் குறிப்பிற்றாதலின், அதனைக் “கடுஞ்சிலை” யென்றும் “கடவும்” என்றும் கூறினார். ஏவுதற் குறிப்பிற்றாய முழக்கம் “சிலைப்பு” எனப்படும் போலும் ! இனி, வில்வீரரை யேவும் முரசு முழக்க மென்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். கடலை முரசமாகவும் காற்றை முரசு முழக்கும் குறுந்தடியாகவும் கூறுதல் சான்றோர் மரபு ; “கடுங்குரல் முரசம் காலுறு கடலிற் கடிய வுரற” (பதிற். 66) “புணரி, குணில் வாய் முரசின் இரங்குந் துறைவன்” (குறுந். 328) என்று வருவன காண்க. “கால் கடிப்பாகக் கடல் ஒலித்தாங்கு முரசம் அதிரவெனக் கூட்டுக” என்பது பழையவுரை. 5 - 8. வெவ்வரி ............ பெற னல்லது. உரை : வெவ்வரி நிலைஇய எறிந்தல்லது - கண்டார் விரும்பத்தக்க கோலங்கள் நிலைபெற்ற பகைவர் மதிலை யழித்தன்றி ; உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய - உணவு உண்பது. |