துறை : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும் தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும். பெயர் : மண்கெழு ஞாலம். 1 - 10. மலையுறழ் ............. வேந்தே. உரை : மலை யுறழ் யானை வான் தோய் வெல்கொடி - மலை போலும் யானையின்மேல் வானளாவ எடுத்த வெற்றிக்கொடியானது ; வரைமிசை யருவியின் - மலைமேலிருந்து விழும் அருவி போல ; வயின் வயின் நுடங்க - இடந்தோறும் அசைந்து விளங்க ; கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம் - கடல் போன்ற தானையின் நடுவே கடிய முழக்கத்தையுடைய முரசு ; கால் உறு கடலின் கடிய உரற - காற்றால் மோதப்பட்ட கடல்போலக் கடிதாய் முழங்க ; எறிந்து சிதைந்த வாள் - பகைவரை எறிதலால் சிதைவுற்ற வாள் வீரரும் ; இலை தெரிந்த வேல் - இலைபோன்ற தலையையுடைய வலிய வேலேந்திய வீரரும் ; பாய்ந்து ஆய்ந்தமா - பகைவர்மேற் பாய்தலால் ஓய்வுற்ற குதிரைகளும் ; ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு - ஆராய்ந்து தெரிந்து கொள்ளப்பட்ட போர் வேட்கையினையுடைய வீரர்களும் கொண்ட தானையுடன் சென்று ; படு பிணம் பிறங்கப் பகைவர் நூறி - போரிலே பட்டு வீழும் பிணங்கள் குவிந்து உயரப் பகைவரைக் கொன்றழித்து ; கெடு குடி பயிற்றிய - அவர் நாட்டில் கெட்டோருடைய குடிகளை வாழச்செய்த ; கொற்ற வேந்தே - வெற்றி வேந்தனே எ - று. யானைக்கு மலையும் கொடிக்கு அருவியும் உவமமாயின. “பெருவரையிழிதரும் நெடுவெள் ளருவி, ஓடை யானை யுயர்மிசை யெடுத்த, ஆடு கொடி கடுப்பத் தோன்றும்” (அகம். 358) என்று பிறரும் கூறுதல் காண்க. “உரவுக்கடலன்ன தாங்கருந் தானையொடு” (பதிற். 90) என்று பிறரும் கூறுதல்போல, ஈண்டும் ஆசிரியர், “கடல்போல் தானை” யென்றார். கேட்ட பகைவர் உள்ளத்தே அச்சத்தைப் பயத்தல்பற்றிக் “கடுங்குரல் முரசம்” என்றார். “எறிந்து சிதைந்து வா ளென்றும், “பாய்ந்தாய்ந்த மா” என்றும் கூறியது, முறையே வாட்படை, குதிரைப்படைகளின் போர்ப் பயிற்சியின் சிறப்புக் குறித்து நின்றன. வாள், வேல் குதிரை யென்பன. அவ்வவற்றையாளும் தானைவீரரைச் சுட்டி நின்றன. ஒடுவினை வாள் முதலியவற்றோடும் கூட்டுக. ஆய்தல், ஓய்தல். பல போர்களிலும் அறம் பிழையாது வென்றி மேம்பட்டாரையே வீரராக ஆராய்ந்து தேர்ந்து கோடலின், “ஆய்ந்து தெரிந்த மறவ” ரென்றும், அவர்தாமும் அப் போரிடைப் பெறும் புகழே விரும்பி நிற்றல் பற்றிப் “புகல் மறவ” ரென்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “நுடங்க எனவும் உரற எனவும் நின்ற வினையெச்சங்களை நூறி யென்னும் வினையொடு முடிக்க” என்றும், “புகன் மறவரொடு என்னும் ஒடுவை, வாளொடு, வேலொடு, மாவொடு என எங்கும் |