என்புழிப்போல . பகைவர் எஞ்ஞான்றும் புறத்தே குற்றங்கூறி இகழ்வது இயல்பாதலின், அதனைக் கேட்டு மனவமைதி குலைவதினும், கேளாது அவரை வேரொடு தொலைத்தற்குரிய காலமும் கருவியும் இடமும் நோக்கி யிருத்தல் அறிவுடை வேந்தற்கு ஆண்மையும் புகழும் பயத்தலின், “பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீர் ஒண்மை” யென்றார் . புரைதீர் ஒண்மை யென்றதனால், பகைவர் புறத்தே இனிமை தோன்றக் கூறுவனவற்றையும் கொள்ளாமை கூறியவாறாயிற்று . “நல்ல போலவும் நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காதனெஞ்சினும் மிடைபுகற் கலமரும், ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது”, (புறம். 58) என்று சான்றோர் கூறுதல் காண்க . வாய்மையும் ஒண்மையும் முறையே உரை யுணர்வு கட்கு அணியாயினமையின், உடற்கு அணியாகும் பூணினை, “பூண்கிளர் மார்ப” என்றொழிந்தார். இனி, அரசமாதேவி்யின் நலம் கூறுவார், நாணமே உருவாய்க் கொண்டு விளங்கும் ஒட்பத்தை, “பெண்மை சான்று” என்றார். பெண்மை, பெண்கட்குரிய அமைதித்தன்மையாயினும், ஈண்டுச் சிறப்புடைய நாண்மேல் நின்றது . பெண்டிரின் உருவு நாணத்தாலாய தென்பதனை, “நாண்மெய்க் கொண் டீட்டப்பட்டார்” (சீவக. 1119) என்று பின்வந்த சான்றோரும், “பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கி” (நற். 94) எனப் பண்டைநாளை இளந்திரையனாரும் கூறுதல் காண்க . இனிப் பெண்மை சான்றென்றற்கு, பெண்பாற்குரிய வெனப்பட்ட (தொல். பொ. பொ. 15) “செறிவும், நிறையும், செம்மையும், செப்பும், அறிவும், அருமையும்” நிறையப்பெற்று என்றுமாம் . மடமாவது, தான் தன் அறிகருவிகளால் ஆராய்ந்து கொண்டதனை எத்துணை இடையூறும் இடையீடும் எய்தினும் விடாமை. இஃது அறிவின் திட்பத்தால் விளையும் பயனாதலின் “பெருமடம்” என்றார். தான் தன் வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட காதலற்கு நலந்தருவன வன்றிப் பிறவற்றின்பால் மடம்பட நிற்றல்பற்றி, மடம் எனப்படுவதாயிற்று. ஈத்துவக்கும் இன்பமும் புகழும் கருதுவோர் பிறவற்றின் பால் மடம் படுதல்பற்றி, கொடைமடம் படுதல் போல்வது ; இதற்கு வேறு பிற கூறுதலுமுண்டு . கற்பாவது, தன் மென்மைத் தன்மையைப் பெற்றோராலும் சான்றோராலும் நூன்முகத்தாலும் இயற்கை யறிவாலும் அறிந்து, எக்காலத்தும் தன்னைப் பாதுகாத்தொழுகும் அறிவுடைமை . நினைவு, சொல், செயல் என்ற மூன்றும் கற்புநெறியே நிற்றலின், “கற்பிறை கொண்ட புரையோள்” என்றார் . இனி, இதற்குக் கற்பால் இறைமைத் தன்மைபெற்ற புரையோள் என்றுரைப்பினு மமையும். ஈண்டுக் கூறப்படாது எஞ்சிநிற்கும் நற்குண நற்செய்கைகளெல்லாம் அகப்பட, “புரையோள்” என்றார் . சொல்லுக்கு வாய்மையும், நினைவுக்கு ஒண்மையும்போல உயிர்வாழ்க்கைக்குத் துணைமையாம் இயைபுபற்றி, “புரையோள் கணவ” என்பதை இடையே கூறினார். 17 - 19. தொலையா.......................இன்புறுத்தினை. உரை : தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற - குன்றாத கோட்பாட்டினையுடைய சான்றோராகிய சுற்றத்தார் நீங்காது சூழ வேள்வியின் கடவுள் அருத்தினை - போர்க்களத்தே பகைவரை வென்று |