கொண்டு, மகளிரை விளையாட்டு மகளிராகக் கொள்ளின், வினையினை ஆகுபெயரால் வினைபுரியும் உழவர்க்கேற்றுக. பகடு கொண்டு கடாவிட்டுத் தெழித்தும் பண்டியிலேற்றிப் பகட்டினால் கொணர்வித்தும் நெற்பயன் கொள்ளப் பெறுதலின், “பகடுதிர்த்த மென்செந்நெல்” எனப் பகட்டால் விசேடித்தார் ; பிறரும் “பகடுதரு செந்நெல்” (புறம். 390) என்றல் காண்க. செந்நெல், வெண்ணெல் போலும் நெல்வகை. மென்மை, “சோற்றது மென்மை” யென்பது பழையவுரை. தூய்மை செய்த செந்நெல்லைப் பொன்மலைபோற் குவித்து, அதனை அளத்தற்கென்று அம்பண வளவையைச் செருகி வைத்திருப்பது, கூட்டிடத்தே குளவியினம் இருப்பது போறலின், “அளவை நிறைகுவித்தாங்கு” என்றார். அளவையை நெற்குவையில் உறைவித்தலாவது, அதன் உட்புறத்தே ஒரு பகுதி நெல்லிருப்பப் புதைத்தல். உறைவித்தல், ‘குச்’ சாரியை பெற்று உறைகுவித்தல் என வந்தது. அளவை : தொழிற்பெயர் ; நான்காவது விகாரத்தால் தொக்கது. இதனை இற்றைப் போதும் நெற்களங்களிலும் நெல் விற்கும் களரிகளிலும் காணலாம். பண்டை நாளைய அம்பணம், மூங்கிலாலாயது ; இற்றைநாளைய அம்பணம், இரும்பினாலாயது ; இதுவே வேறுபாடு. தேறு, கொட்டும் குளவி ; தான் குறித்த பொருளைக் கொடுக்கினால் தெறுவதுபற்றித் தேறு எனப் பெயர் பெற்றது. கொட்டியவழி யுண்டாகும் துன்ப மிகுதி பற்றி, கடுந்தேறு என்றார். அது வாழும் கூட்டை யழிக்கின், அழிப்பாரைச் சூழ்ந்துதெறும் இயல்பிற்றாதல்பற்றி, முதியோர் அது செய்யாராதலின், கூட்டை யழிப்பவர் இளஞ் கிறார் என்பது கொண்டு, “செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாஅர்” என்றார். மொசிதல், நிறைதல். மகாஅர், இளையோர் மேற்று ; “சிறு தொழில் மகா அர்” (அகம். 206) என்புழிப் போல செழுங்கூடு கிளைத்த மகார், குளவியின் கடுந்தெறற் கஞ்சியலந்து மூலைக்கொருவராய் ஓடி யுலமருவதுபோல, “நின் உடற்றியோர் அலந்தனர்” என்றார். கடுந்தேற் றுறுகிளை, மகாஅர்பால் பகை நினையாது தன் செழுங்கூட்டின்கண் உறுகிளையுடன் துஞ்சும் என்றதனால், நீயும் நின் செழுமனைக்கண் கிளையுடன் இனிதிருக்கின்றனையேயன்றிப் பிறரைப் பகைக்கின்றா யில்லையாயினும், மகார்தம் இளமையால் கூடு கிளைத்து வருந்துவதுபோல, நின் உடற்றியோர் தம் அறியாமையால் போர் விளைத்துக் கெடுவாராயினர் என்றலின், “அலந்தனர் நின் உடற்றியோர்” என்றும், “பெரும” என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “அளவைக்கென நான்காவது விரிக்க” என்றும், “கடுந்தேறுறுகிளை, கடிதாகத்தெறுலையுடைய மிக்க குளவியினம்” என்றும், “மொசிந்தன வென்றது, மொய்த்தனவாய் என்னும் வினையெச்சமுற்” றென்றும் கூறுவர். நெற்குவையும் அம்பணவளவையும் குளவியினத்தின் செழுங்கூட்டையும் குளவியையும் சிறப்பிக்கும் உவமமாயின ; இவை உருவுவமம். குளவியும், அதன் கூடும், அக்கூடு கிளைக்கும் இளந்துணை மகாஅர் என்ற மூன்றுவமைகளும் சேரமானையும் அவன் நகரையும் பகைவரையும் சுட்டித் தொழிலுவமமாயின. ஆகவே இவை அடுத்துவர லுவமமாகாமையறிக. இனி, உறை குவித்தல் என்பதனை இருசொற்படப் பிரித்து, உறையாகக் |