வற்றச் செய்த ; மடங்கல் தீயின் - வடவைத் தீயினையும் ; சினம் கெழு குருசில் - சினம் பொருந்திய குருசிலே ; அம் சாறு புரையும் நின் தொழில் - அழகிய விழாவினைப்போல இன்பம் செய்யும் நின்னுடைய தொழிலை ; ஒழித்து - விலக்கி ; நின் உடற்றிசினோர்க்கு அனையை - நின்னைப் பகைத்துப் பொருவார்க்கு ஒத்திருக்கின்றாய் எ - று. கூட்டத்துச் செஞ்சடர் நிகழ்வினையும் தீயினையும் அனையை என இயையும். குருசில், நின் உடற்றிசினோர்க்கு மடங்கற்றீயின் அனையை என இயைத்து முடிக்க. ஒராஅ என்பதனை ஒருவ வென்றும், ஞெமர வென்பதனை ஞெமர்ந்தென்றும், ஈண்டி யென்பதனை ஈண்ட வென்றும் பரந்தென்பதனைப் பரவவென்றும் திரித்துக் கொள்க. பழையவுரைகாரரும் “ஒராஅ வென்றதனை ஒருவ வெனத் திரித்து ஈண்டி யென்றதனையும் ஈண்டவெனத் திரிக்க” என்றும், “வெள்ளம் பரந்தென்றதனை பரக்கவெனத் திரித்து அதனை நுடக்கியவென நின்ற செய்யிய வென்னும் வினையெச்சத்தோடு முடித்து, அதனைச் சுடர் நிகழ்வு என்னும் தொழிற்பெயரொடு முடித்து, வெள்ளம் பரக்கையாலே அவ்வெள்ளத்தை மாய்க்க வேண்டிச் சுடர் நிகழ்தலை யுடைத்தான தீயென வுரைக்க” என்றும் கூறுதல் காண்க. எல்லா வுயிர்களும் ஒருங்கு மடியும் ஊழிக்காலத்தைத், “துஞ்சல் உறூஉம் பகல்” என்றார். இருள்படரும் முடிவுக்கால மாதலால், “மாலை” யென்றார். இத்தகையதொரு காலம் வருதல், நிலமகட்குச் சுமை நீக்கம் குறித்தென்றற்கு, “நிலம் பொறை யொராஅ” என்றும், தன்னில் மூழ்கி மறையாத இடமும் பொருளும் இல்லையென்னுமாறு நீர் பரத்தலால், “நீர் ஞெமர வந்தீண்டி” என்றும், அவ்வெள்ளம் கடுகப் பரந்தெழுதற்குச் சூறைக்காற்று மோதுதலால் பேரலைகள் தோன்றிக் கடுகிவருவது உயிர்கண் மேற் சினங் கொண்டு பொங்கி வருவது போறலின், “உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்” என்றும் கூறினார். “துஞ்சல் எல்லா வுயிரும் படுத” லென்றும், “பகலென்றது ஊழியை” யென்றும், “மாலை யென்றது ஊழி முடிவினை” யென்றும், “உருத்தெழு வெள்ளமென்றது பல்லுயிரையும் ஒருங்கு தான் கொல்லும் கருத்துடையது போலக் கோபித்தெழு வெள்ளமென்றவா” றென்றும், “இச்சிறப்பானே இதற்கு உருத்தெழு வெள்ளமென்று பெயராயிற்” றென்றும் பழைய வுரைகாரர் கூறுகின்றார். ஞாயிறு முதலிய கோள்களும் ஏனை விண்மீன்களும் தோன்றாவாறு திணியிருள் பரந்துவிடுதலால் திசையறியலாகாமையின், “வரையா மாதிரத்து” என்றும், இருள் பரவும்போதே வெள்ளந்தானும் உடன்பரந்துவிடுமாறு தோன்ற, “இருள் சேர்பு பரந்து” என்றும் கூறினார் . இருளென்புழி உடனிகழ்ச்சிப் பொருட்டாய ஒடு வுருபு விகாரத்தாற்றொக்கது. அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்து என மாறி இயைக்க. இவ்வூழியிருளைப் போக்கி நீர்ப்பெருக்கினை வற்றச்செய்தற்கு ஒரு ஞாயிறு அமையாமைபற்றிப் பன்னிரு ஞாயிறுகள் பல்வேறிடங்களில் கூட்டமாய்த் தோன்றிப் பேரொளியும் பெருவெப்பமும் செய்தலால், “அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வின்” என்றார். படுதல், தோன்றுதல், |