அகலுதல், விரிதல்; “அஃகி யகன்ற வறிவென்னாம்” (குறள். 175) என்றாற்போல. பொங்கு பிசிர் என வெள்ளத்தைச் சுட்டிக் கூறினார் . பிசிர் வற்றுவதுபோல இவ்வூழி வெள்ளம் வடவைத் தீயால் வற்றுமாறு தோன்ற, நுடக்கிய வென்பதனைச் செய்யிய வென்னும் வினையெச்சமாகக் கொண்டு “நிகழ்வின்” என்பதனோடு முடிப்பர், பழையவுரைகாரர். “ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்” வினால், திணியிருள் கெடுவதுபோல, சேரனது கொற்ற வொளியினால் பகையிருள் கெடுதல் பற்றியும் மடங்கற் றீயால் உருத்தெழு வெள்ளம் வற்றுவதுபோல, பகைவரது கடல்மருள் பெரும்படை கெட்டழிதல் பற்றியும் “செஞ்சுடர் நிகழ்வின் மடங்கற் றீயின் அனையை” என்றார். இனி, “பொங்கு பிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்” என்ற பாடமே கொண்டு, உருத்தெழு வெள்ளத்தின் பொங்குகின்ற பிசிரைக் கெடுத்த செஞ்சுடர் நிகழ்வினையும், மடங்கற் றீயினையும் அனையை என்பதே நேரிய முறையாத லறிக. செஞ்சுடர் நிகழ்வு பேரிருளைப் போக்கிப் பிசிர்ப்படலத்தைக் கெடுக்க, மடங்கற்றீ வெள்ளத்தைச் சுவறச் செய்யுமென வறிக. இக் கூறியவாற்றால், சினங்கெழு குருசில், நின் உடற்றிசினோர்க்கு, சாறுபுரையும் நின் தொழிலொழித்து, துஞ்சலுறூஉம் பகல்புகு மாலை, ஞாயிறுபட்ட அகன்றுவரு கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வினையும், பொங்கு பிசிர் நுடக்கிய மடங்கற் றீயினையும் அனையை என முடிக்க. விழாக்காலம் நணியார், சேயார், சிறியார் பெரியார், உடையார் இல்லார், இளையார், முதியார் எல்லார்க்கும் இன்பம் செய்தல் போலச் சேரமானும் எல்லார்க்கும் தன் ஆட்சியால் இன்பம் செய்தலின், “அம்சாறு புரையும் நின் தொழில்” என்றார். இன்பஞ் செய்வதைத் தவிர்த்துப் பகைவர்க்குத் துன்பம் செய்தல் பற்றி, “நின்தொழில் ஒழித்து........அனையை” யென்றார். ஒழித்தென்னும் வினையெச்சம் அனையையென்னும் குறிப்புவினை கொண்டது. ஆக்கம் வருவித்துக் கொள்க. 1 - 3. இகல்..........நாடு. உரை : கறுத்தோர் - நின்னைப் பகைத்தவர் ; இகல்பெருமையின் படை கோள் அஞ்சார் - கருத்தில் பகைமை பெரிதாயிருத்தல் பற்றிப் படையெடுத்தற்கு அஞ்சாராய் ; சூழாது துணிதல் அல்லது - காலம் இடம் வலிமுதலியவற்றை ஆராயாமல் போர்செய்யத் துணிவதேயன்றி ; நாடு - தம் நாட்டை ; உடன் காவல் வறிது எதிரார் - பலராய்க் கூடித் காத்தற்குச் சிறிதும் மாட்டாராவர் காண் எ - று. இகல், மாறுபாடு. இஃது உள்ளத்தே மிக்க வழி, அறிவு தொழில் செய்யாமையின், சினத்திற் கிரையாகி மேல் விளைவும் பயனும் ஆராய்ந்திலர் என்பார், “இகல் பெருமையின் படைகோள் அஞ்சார்” என்றும், “சூழாது துணித லல்லது” என்றும் கூறினார். சூழ்ந்த வழித் தமது சிறுமையும் நின் பெருமையும் இனிது தெளிந்து விளையக் கடவ துன்பத்துக்கும் பழிக்கும் அஞ்சுவ ரென்பார், “அஞ்சா” ரென்றும், பலராய்க் கூடிக் காக்கினும் காவல் நிரம்பாது என்றற்கு, “உடன் காவலெதிரார்” என்றும் கூறினார். ஒரு |