அழகினையுடைய ; புகார்ச் செல்வ - புகார் நகரத்தையுடைய செல்வனே ; பூழியர் மெய்ம்மறை - பூழிநாட்டார்க்கு மெய்புகு கருவி போன்றவனே எ - று. மருதத்திணைக்குரிய பொருள் பலவும் குறைவற நிறைந்திருக்குமாறு தோன்ற, “மருதஞ் சான்ற மலர்தலை விளைவயல்” என்றும், ஆங்குறையும் உழவர் மகளிர் வயற்கண் விளைபயிரை நாரைகள் மிதித்துச் சிதைக் காவண்ணம் ஒப்பும் செய்கையினராதலை, “செய்யுள் நாரை யொய்யும் மகளிர்”, என்றும் கூறினார். விந்திய வொன்று ஆயிரமாக விளைதலின், செல்வக் களிப்பால் இரவு பகல் எஞ்ஞான்றும் விளையாட்டினை விரும்பி யொழுகுகின்றா ரென்பார், “இரவும் பகலும் பாசிழை களையார், குறும்பல் யாணர்க் குரவை யயரும்” என்றார் பழையவுரைகாரர், “இரவும் பகலும் குரவை யயரு மெனக் கூட்டுக” வென்றும், “மருத மென்றது, மருதநிலத் தன்மையை” யென்றும், “குறும்பல் குரவை யென்றது, ஒன்று ஆடும் இடத்திற்கு ஒன்று அணியதாய் அவைதாம் பலவா யிருக்கின்ற குரவை யென்றவாறு” என்றும், “குரவை யயரும் புகார் எனவும், காவிரி மண்டிய புகார் எனவும் கூட்டுக” என்றும் கூறுவர். காவிரி பாய்தலால் நீர்வளம் சிறத்தலின், வானளவா வுயர்ந்த சோலைகளும் கொடிமாடப் பெருமனைகளும் சேய்மைக்கண்ணே காண்பார்க்கு அழகிய தமது காட்சியினை வழங்கும் சிறப்பு விளங்க, “சேய்விரி வனப்பிற் புகார்” என்றும், அதனாற் செல்வ மிகுதி தோன்ற, “செல்வ” என்றும் கூறினார் . பூழியர், பூழி நாட்டார் ; இந் நாடும் சேரர்க்குரியது; “பல்வேற் பூழியர் கோவே” (பதிற். 84) என்று பிறரும் சேரவேந்தரைக் கூறுதல் காண்க . 10 - 11. கழை................................பொறைய. உரை : கழை விரிந்து எழுதரு - மூங்கில்கள் விரிந்தெழு கின்ற ; மழை தவழ நெடுங்கோட்டு - மேகங்கள் தவழும் நெடிய உச்சியையுடைய ; கொல்லிப் பொருந - கொல்லிமலைக்குத் தலைவனே ; கொடித் தேர்ப் பொறைய - கொடி யுயர்த்திய தேர்களையுடைய மலைநாட்டரசே எ - று. மூங்கில்கள் விரிந்து வளரும் இயல்பினவாதலின், “விரிந்தெழுதரு” என்றார். கொல்லி, கொல்லிமலை ; இதனைச் சூழ்ந்த நாடு, கொல்லிக் கூற்றமென்றும் வழங்கும். பொறை, மலை . சேரநாடு மலைநாடாதலின், சேரர் பொறைய ரெனவும் கூறப்படுவர். 11 - 17. நின் வளனும்................யானே. உரை : நின் வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவிறந்தன என - நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்கள் ஆராய்ச்சியெல்லையைக் கடந்தனவாகும் என்று ; யான் பன்னாள் சென்று உரைப்பவும் தேறார் - யான் பலநாளும் சென்று உரைத்தேனாகவும் நின் பகைவர் தெளியாராயினார் ; பிறரும் சான்றோர் |