இதுவுமது. பெயர் : நலம்பெறு திருமணி. 3 - 17. சாயறல் .......... கருவில். உரை : சாய் அறல் கடுக்கும் - நுண்ணிய கருமணலை யொக்கும் ; தாழ் இருங் கூந்தல் - காய்ந்த கரிய கூந்தலையும் ; கொடுமணம் பட்ட வினை மாண் அருங்கலம் - கொடுமணம் என்னும் ஊரிலே உண்டாகிய அரிய கலன்களையும் ; பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் - பந்தர் என்னும் ஊரிடத்தே பெற்ற பலரும் புகழ்கின்ற முத்துக்களையும் ; வரை யகம் நண்ணி - பெருமலைகளை யடைந்து அவற்றிடத்தம் ; குறும்பொறை நாடி - சிறுபெரு மலைகளை யடைந்து அவற்றிடத்தும் தேடி ; தெரியுநர் கொண்ட - குற்றமற ஆராய்ந்துகொள்ளும் அறிவினை யுடையோர் கொண்ட ; சிரறுடைப் பைம்பொறி - சிதறிக் கிடத்தலையுடைய பசிய பொறிகளையும் ; கவைமரம் கடுக்கும் கவலையை மருப்பின் - கவைக்கோல்போலக் கிளைத்தலையுடைய கொம்பினையும் ; புள்ளி இரலைத்தோல் புள்ளியினையுமுடைய மான் தோலைக் கொண்டு ; ஊன் உதிர்த்து - அதன் உட்புறத்துத் தசையைக் களைந்து ; தீது களைந்து - ஏனை அழுக்குகளையும் போக்கி ; எஞ்சிய திகழ் விடு - எஞ்சி நின்ற ஒளி வீசுகின்ற ; பாண்டிற் பருதி போகிய புடை - வட்டமாக அறுத்த தோளின் விளிம்பிலே ; கிளை கட்டி - இனமாகச் சேரக் கட்டி ; எஃகுடை இரும்பின் - கூர்மையையுடைய வூசியால் ; வல்லோன் தொழில் வல்லவன் ; உள்ளமைத்து - உட்புறத்தே மணிகளைப் பதித்து அழகுற அணி செய்து ; சூடு நிலையுற்று - சூடுதற்குரிய நிலைமையினை யுறுவித்து ; சுடர்விடு தோற்றம் - ஒளி திகழ்கின்ற தோற்றத்தைப் பெறுவித்தலால் ; விசும் பாடு மரபின் - விசும்பிலே பறக்கும் முறைமையினையுடைய ; பருந்து ஊறு அளப்ப - பருந்தானது ஊனென்று கருதி யதனை யுற்றுக் கவர்தற்கு நினையுமாறு ; நலம் பெறு திருமணி - நலம் பெற்ற உயரிய அத்தோற்பணியாகிய மணியை ; கூட்டும் நற்றோள் - அணிகின்ற நல்ல தோளினையும் ; ஒடுங் கீ ரோதி - ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும் ; ஒண்ணுதல் - ஒள்ளிய நெற்றியினையும் ; வேறுபடு திருவின் பிறப்பால் திருமகளின் வேறுபட்டா ளென்னும் சிறப்பெய்திய மாண்பினையுமுடைய நின் தேவியினுடைய ; நின்வழி வாழியர் - நின் குடுவழி நீடு வாழ்வதன் பொருட்டு ; கருவில் - கருவிடத்தேயமைந்து எ - று. மென்மையும் நுண்மையு முடைமைபற்றிக் கருமணலை “சாயறல்” எனல் வேண்டிற்று. தாழ் இருங் கூந்தல் - முதுகிடத்தே தாழ்ந்த கரிய கூந்தல் ; |