“புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பால்” (அகம். 126) என்று பிறருங் கூறுதல் காண்க . கூந்தலையும், தோளினையும் நுதலினையுமுடைய தேவியினது கருவில் எனக் கூட்டுக . தாழிருங் கூந்தலென்றவர் மறுபடியும் ஒடுங்கீரோதி யென்றது, கூந்தலின் நீட்சியும் நிறப்பொலிவும் பொதுப்படக் கூறி, அதனைச் சுருள் என்னும் பகுதியாக முடிக்கும் சிறப்பினை யுணர்த்தற்கு திருமகட்குரிய உருவும் பிற நலங்களும் பொருந்திப் பிறப்பொன்றினால் வேறுபடுவது குறித்துத் தேவியை, “வேறுபடு திரு” என்றார் . வேறுபடு திருவின் என்பதற்குப் பழையவுரைகாரர், “வேறுபடு திருவின் என்றது, இவளுக்குக் கூறிய குணங்களால் அவளின் வேறாகிய நின் தேவி என்றவா” றென்றும், “திருவின் என்னும் இன் அசைநிலை” யென்றும் கூறுவர். கொடுமணம், பந்தர் என்பன, அக்காலத்தே சிறப்புற்றிருந்த ஊர்கள் வினைமாண் அருங்கலம். தொழில்நலத்தால் மாண்புற்ற அணிகலன்கள் பலர், பலநாட்டவர் . வேள்விசெய்தற்கண், அதனைச் செய்வோர் நல்லிலக்கணம் அமைந்த புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து போர்த்துக் கொள்பவாதலின், அதனை, மானிலக்கணம் தெரிந்தாரைக் கொண்டு பெறுதல் வேண்டி விடுத்தலின், அவரைத் “தெரியுநர்” என்றும், அவர்கள் அதனை நாடிப் பெறுமாறு கூறுவார். “வரையகம், பெருமலைத் தொடர். குறும்பொறை, சிறு குன்றுகள் நிறைந்த மலைப்பக்கம். கொச்சிநாட்டுப் பகுதிகளை இடைக்காலக் கல்வெட்டுக்கள் நெடும் பொறை நாடென்றும் குறும்பொறை நாடென்றும் (A.R. No. 321 of 1924) கூறுகின்றன. இவ்விடத்தை நண்ணி நாடுதலின், உயரிய மான்வகைகள் அவ்விடத்தே வாழ்தல் பெற்றாம் . நல்லிலக்கணம் அமைந்த மானின் நலம் கூறுவார் கிளைத்த கொம்புடைமையும் உடலெங்கும் சிதறிய புள்ளியுடைமையும் விதந்து, “பைம்பொறிக் கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பிற் புள்ளி யிரலை” யென்றார். “வரையென்றது பெருமலையை” யென்றும், குறும்பொறை யென்றது, “அதனை யணைந்த சிறு பொற்றைகளை” யென்றும், “தெரியுநர் கோடல், இலக்கணக்குற்ற மற ஆராய்ந்து கோடல்” என்றும், “பைம்பொறி யென்றது செவ்விகளையுடைய புள்ளிகளை” யென்றும், “மேற் புள்ளியிரலை யென்றதனை அதன் சாதிப் பெயர் கூறியவாறாகக் கொள்க” என்றும் பழையவுரை கூறும் . சிரறுதல் சிதறுதல் . கவலை, கவர்த்தல். வேள்வி செய்வோன் மான்தோலைப் போர்த்துக்கொள்ள, அவன் மனைவி அத்தோலை வட்டமாக அறுத்து அதனைச் சுற்றிலும் முத்துக்களையும் பிற வுயரிய மணிகளையும் கட்டி, நடுவே உயரிய மாணிக்கமணிகளைத் தைத்துத் தோளிடத்தே அணிவள்போலும். ஈண்டு ஆசிரியர் அரசமாதேவி இவ்வாறு அணிந்தாளென்றலின், மயிர் முதலியன மூடிப் பொலிவின்றி யிருக்கும் பகுதியைத் தீது என விலக்குதலால், “தீ துகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி” என்றும், வட்டமான தோலைப் “பாண்டிற் பருதி” யென்றும், அதன் விளிம்பிலே கொடுமணத்துக் கலத்தையும் பந்தரிடத்துப் பெற்ற முத்தினையும் இனஞ்சேரக் கட்டினாரென்றற்கு, “புடைகிளை கட்டி” யென்றும், உள்ளிடத்தே தாமரை முதலிய பூவைப் போலும் அழகிய வேலைப்பாட்டினைச் சிவந்த மாணிக்கமணி கொண்டு செய்யும் தொழில் வல்லுநரை, “வல்லோன் |