எஃகுடை யிரும்பின் உள்ளமைத்து” என்றும், அவ்வாறு அமைத்தலால் சூடுதற்குரிய நிலையுறுவதால், “சூடு நிலையுற்று” என்றும் கூறினார். உறுவித்தெனற்பாலது, “உற்று” என வந்தது. சிவந்த மணிகள் இடையே பதிக்கப்பெற்றுச் செவ்வொளி கான்று திகழ்தல் கண்டு, ஊனென்று கருதிப் பருந்து கவர்ந்துசெல்லக் கருதுமென்பார், “விசும்பாடு மரபிற் பருந்தூறளப்ப” என்றார். ஊன் தேடி யுற்றுண்டு பயின்ற கூரிய பார்வையினையுடைய பருந்தினை மயக்குமாறு சிவந்த ஒளிகொண்டு விளங்கும் மணியாதல்பற்றி, “நலம் பெறு திருமணி” எனப்பட்டது. பொன்னிடைப் பதித்துப் பொலிவுறுத்தப் பெறும் மாணிக்கமணி, தோலிடைப் பதித்தவழியும் தன் நல்லொளி குன்றாது திகழும் சிறப்புக் குறித்து இவ்வாறு நலம்பெறு திருமணி யென்ற நலத்தால், இப் பாட்டிற்கு ‘நலம்பெறு திருமணி’ யென்று பெயராயிற்றென வறிக. இனிப் பழையவுரைகாரர், “நலம்பெறு திருமணியென்றது மணியறிவாரால் இதுவே நல்லதென்று சொல்லப்படுதலையுடைய திருமணி யென்றவாறு; இச் சிறப்பானே இதற்கு நலம்பெறு திருமணியென்று பெயராயிற்று” என்பர். இதன்கட் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின், தாழிருங் கூந்தலையும், திருமணி கூட்டும் நற்றோளையும், ஓதியையும், ஒண்ணுதலையும், வேறுபடு திருவினையுமுடைய நின் தேவியின் கருவிலே என்பதாம். இனி, இப்பகுதிக்கண் வந்தவற்றிற்கு உரைக்குறிப்புக் கூறலுற்ற பழையவுரைகாரர், “கவலைய வென்னும் அகரம் செய்யுள் விகார” மென்றும், பாண்டி லென்றது, வட்டமாக அறுத்த தோலினை யென்றும், “பருதி போகிய புடை யென்றது, வட்டமாகப் போன அத்தோலது விளிம்பினை” யென்றும், “எஃகுடையிரும்பின் உள்ளமைத் தென்றது. கூர்மையையுடைய கருவிகளால் அத்தோலுட் செய்யும் தொழில்களெல்லாம் செய்தமைத் தென்றவா” றென்றும், அமைத்தென்றதனை “அமைப்பவெனத் திரிக்க” வென்றும், வல்லோனால் என விரித்து “வல்லோனால் நின் தேவி சூடுதல் நிலையுறுதலால் என்க” என்றும், “வல்லோன் யாகம் பண்ணுவிக்க வல்லவன்” என்றும், “தோற்ற மென்றது, தோற்றமுடைய அத்தோலினை” யென்றும் கூறுவர். கருவில் என்பதனோடு அமைந்தென ஒருசொல் வருவித்து, வாழியரென்ற முற்றெச்சத்துக்கு முடிபாக்காது. “வாழியரென்னும் வினையெச்சத்தினைச் சூடு நிலையுற்று என்னும் வினையொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர். 18 - 21. எண்ணியல்..............பெற்றனை. உரை : எண் இயல் முற்றி - எண்ணப்படுகின்ற திங்கள் பத்தும் நிரம்பி ; ஈர் அறிவு புரிந்து - இருவகை யறிவும் அமைந்து ; சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் - சால்பும் நடுவுநிலையு முள்ளிட்ட பிற நற்பண்புகளும் ; காவற் கமைந்த அரசு துறை போகிய வீறு சால் - நாடு காத்தற்குவேண்டும் அரசியலறிவுவகை பலவும் முற்றக்கற்றுத் துறைபோகிய சிறப்பும் நிறைந்த ; புதல்வற் பெற்றனை இவணர்க்கு - நன்மகனைப் பெற்றுள்ளாய் இந் நிலவுலகத்து வாழ்வார் பொருட்டு எ - று. |