கருவளர்தற்குரிய காலத்தை ஒவ்வொரு திங்களாக வெண்ணுப வாதலின், “எண்ணியல் முற்றி” யென்றார் . ஈரறிவு - இருவகை யறிவு ; அவை இயற்கையும் செயற்கையுமாகிய இருவகை யறிவுகள். இயற்கையாய கண்ணொளி யில்லார்க்கு ஏனைய ஞாயிற்றொளி முதலியன பயன்படாமை போல, இயற்கையாய உண்மையறிவில்லார்க்குக் கல்வி கேள்விகளானாம் செயற்கையறிவு பயன்படாதாகலின், “ஈரறிவு புரிந்து” என்றாரென்றுமாம் . இ்ம்மை மறுமை யறிவுகளுமாம். பெரிய அறிவெனினுமமையு மென்பர் பழையவுரைகாரர். சால்பு, நற்குணங்களின் நிறைவு ; அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்தின் நிறைவு. அரசாளும் திறனும் கருவி்லே வாய்க்குந் திருவென்றற்கு, “காவற்கமைந்த அரசு துறை போகிய வீறு” என்றார். பிறந்த பி்ன்பே இவையாவும் பெறற் குரியவாயினும், இவற்றின் பேறு இனிது பொருந்துதற்குரிய நல்வாய்ப்புக் கருவிலே உண்டாவதாகலின், இவ்வாறு கூறினார் என அறிக. இக்கருத்தே, “பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த, மக்கட்பே றல்ல பிற” (.குறள் . 61) என்புழியாம் அமைந்துகிடத்தல் காண்க. பெற்றனை யென்பதைப் பழையவுரைகாரர் முற்றெச்சமாக்கி மேல் வருவனவற்றோடு முடிப்பர் . அரசனது புதல்வற் பேறு அவன் கோற்கீழ் வாழ்வார்க்கு ஏமமாதல்பற்றி, “இவணர்க்” கென்றார். மக்கட்பேறு, பெற்றோர்க்கே யன்றி இப் பெருநிலத்து வாழ்வார்க்கு நலம் பயக்கும் இயல்பிற் றென்பது பண்டைத் தமிழ் நன்மக்கள் கொள்கை . “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க் கெல்லாம் இனிது” (குறள். 68) என்று சான்றோர் கூறுதல் காண்க. 1 - 2. கேள்வி............................உவப்ப. உரை : கேள்வி கேட்டு - அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்டு ; படிவம் ஒடியாது - அவர் உரைத்த விரதங்களை மேற்கொண்டு தவிராதொழுகி ; உயர்ந்தோர் உவப்ப - அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன் மக்கள் மனமகிழும்படி ; வேள்வி வேட்டனை - வேள்விகளைச் செய்து முடித்தாய் எ - று. அருமறைப் பொருளை ஒருவர் தாமே கற்றுணர்தல் கூடாமையின், “கேள்வி கேட்டு” என்றார் . கேள்வி - அருமறைப் பொருள் ; கேட்டற்குரியது அதுவாகலின், கேட்ட பொருளை நடைமுறையில் தெளிந்து நல்லறிவு வைகரப் பெறுதற்கு விரத வொழுக்கம் வேண்டியிருத்தலால், “படிவ மொடியாது” என்றார். கேட்டவற்றை மனத்தால் ஒன்றியிருந்துணர்தற்குத் துணைசெய்வது படிவமென வுணர்க. கேள்விப்பயன் உயர்நிலை யொழுக் கத்துச் சான்றோர்க்கு உவகை பயப்பிப்பதாதலால், “உயர்ந் தோருவப்ப வேள்வி வேட்டனை” யென்றார் . “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்றமாக, மன்ன ரேவல் செய்ய மன்னிய, வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே” (புறம். 26) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, பழையவுரைகாரர், “கேள்வி கேட்டல் - யாகம் பண்ணுதற் குடலான விதி கேட்டல் ; படிவம் - யாகம் பண்ணுதற்கு உடலாக முன்பு செலுத்தும் விரதங்கள் . ஒடியாதென்பதை ஒடியாமல் எனத் திரிக்க” என்றும், “வேட்டனை என்றதனை வினையெச்சமுற்றாக்கி அவ்வினை |