இதுவுமது. பெயர் : தீஞ்சேற்றியாணர். 1 - 3. இரும்புலி........................பொறைய . உரை : பல்வேல் பொலந்தார் யானை இயல் தேர்ப் பொறைய - பலவாகிய வேற்படையும் பொன்னரிமாலை யணிந்த யானையும் இயலுகின்ற தேருமுடைய பெருஞ் சேரலிரும் பொறையே ; இரும்புலி கொன்று - பெரிய புலியைக் கொன்று ; பெருங் களிறு அடூஉம் - அதனாலும் சோர்வடையாது உடன் சென்று பெரியயானையைக் கொல்லுகின்ற; அரும் பொறி வயமான் அனையை - அரிய வரிகளையும் வலியையுமுடைய அரிமாவினை ஒப்பாய் ; பெருங் களிற்றினும் இரும்புலி வலி மிகவுடைத்தாதலின், அதனைக் கொன்றும் சோர்வடையாதே இடையறவின்றிப் பெருங் களிற்றினையும் கொல்லும் பெருவலியுடைமை தோன்ற, “இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்” என்றார் . அரிமாவிற்குப் பொறையனையும், புலிக்கு ஏனை வேந்தரையும் பெருங்களிற்றுக்கு வேளிர் முதலாயினாரையும் கொள்க . பொலந்தார், பொன்னரிமாலை 4 - 7. வேந்தரும்........................வீங்கிருக்கை. உரை : வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின்வழிப் படாஅ ராயின் - முடிவேந்தரும் குறுநில மன்னரும் பிறரும் நின்னைக் கீழ்ப்பணிந்து நின் விருப்பின்வழி ஒழுகாராயின்; நெல் மிக்கு - நெல் மிக்கு விளைய ; அறையுறு கரும்பின் தீஞ்சேற்று யாணர் - அதற்கிடையூறாக வளர்ந்து முற்றியிருத்தல் பற்றி வெட்டப்பட்ட கரும்பினது தீவிய சாறாகிய புது வருவாயினை ; வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை - அவ்விடத்தே வருவோர்க்கு வரையாது வழங்கும் செல்வம் மிகுந்த இருக்கைகள் (ஊர்கள்) என்க. நெல்மிக்கு விளைதலால் அதனையும், கரும்பின் தீஞ்சாறு மேன் மேலும் பெருகுதலால் அதனையும் வருவோர்க்கு வரையாது வழங்குப என்பதாம். அறையுறு கரும்பு, அறுத்தலைப் பொருந்திய கரும்பு. இறுத்தல் இறையென வருதல்போல, அறுத்தல் அறையென வந்தது. நெல்லுக்கு வேலியாக நட்ட கரும்பு மிக வளர்ந்து நெல்லின் வளர்ச்சியைக் கெடுத்தலால், அறுக்கப்பட்ட கரும்பு என்றற்கு “அறையுறு கரும்பு” என்றாரென்க. பழையவுரைகாரரும், “நெல்மிக்கு அறையுறு கரும்பென்றது, நெல்லின்கண்ணே அந்நெல்லை நெருக்கி மிக எழுந்தமையானே |