யெனக் கொள்க” என்றும் கூறுவர் . எண்ணிற்றோ வெனற்பாலது மெலிந்து நின்றது. 8 - 12. கந்து.....................தானையானே. உரை : கந்து கோளீயாது - கட்டுத் தறியோடு பிணிப்புண்டற்கு இடந்தராது ; காழ்பல முருக்கி - குத்துக்கோல் பலவற்றையும் சிதைத்து ; உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி - உயர்ந்து பறக்கும் பருந்தினது நிலத்திடத்தே வீழும் நிழலைச் சினந்து பாயும் ; சேண் பரல் முரம்பின் - சேணிடமெங்கும் பரந்த பருக்கைக் கற்களையுடைய முரம்பு நிலத்திலே ; ஈர்ம்படைக் கொங்கர் ஆபரந்தன்ன - கரிய படையினை யுடைய கொங்கருடைய ஆனிரைகள் பரந்து செல்வதுபோன்ற ; செலவின் பல்யானை செலவினையுடைய பலவாகிய யானைகளை ; அவன் தானை யான் - அவனுடைய தானையிலே ; காண்பல் - காண்கின்றேனே யன்றி அவை இத்துணை யென்று அறிந்திலேன் எ - று. கந்தினிடத்தே பிணித்தற்கு அடங்காது அக் கந்தினை முரித்தழித்தல் பற்றி, “கந்து கோளீயாது” என்றும், குத்தப்படும் குத்துக்கோல் அவ் யானைகளின் உடலிற்பட்டு ஊடுருவும் வலியின்மையின் சிதைந்து போவது தோன்ற, “காழ்பல முருக்கி” யென்றும், பொருளல்லாத நிழலையும் பகைப் பொருளாகக் கருதிச் சினவுதற் கேற்ற மதக்களிப்புடைமைபற்றி, “உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி” யென்றும் கூறினார் . பிணிப் புண்ணா தென்னும் பொருட்டாய “கோளீயாது” என்னும் எதிர்மறை வினை யெச்சத்திரிசொல் முருக்கி, சாடியென்னும் எச்ச வினைகளுடன் அடுக்கி நின்று “செலவின்” என்பதைக் கொண்டு முடிந்தன . உகத்தல், உயர்தல் . கண்ணுக் கெட்டிய. வளவும் பரல் நிறைந்த முரம்பு நிலமே காணப்படுதல்பற்றி, “சேண் பரல் முரம்பு” என்றும், நீர் வேண்டிக் கூவல் முதலியன தோண்டுதற்குரிய குந்தாலி முதலிய படைகளை “ஈர்ம் படை” யென்றும் கூறினார் . கொங்கர் ஆக்கள் பலவுடைய ரென்பதை “ஆ கெழு கொங்கர்” (பதிற். 22) என்று பிறரும் கூறுதல் காண்க. யானைக் கூட்டத்தின் மிகுதியினை ஆனிரைக் கூட்டத்தை யுவமங்காட்டி யுரைத்தல் மரபு : “எருமை யன்ன கருங்கல் லிடைதோ, றானிற் பரக்கும் யானைய” (புறம். 5) என்று சான்றோர் உரைப்பது காண்க. “பல் யானை காண்பல்” என்றதனால் அவற்றை இத்துணையென வெண்ணற் கருமை பெறப்பட்டது. இதுகாறும் கூறியது : ஆறு செல் வம்பலிர், சினப் போர்ப் பொறையன் எனைப் பெரும் படையனோ என்றனிராயின், அவனுடைய தேரு மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணின்றோ விலன் ; அவன் தானையிலே கொங்கர் ஆ பரந்தன்ன செலவின் பல் யானை காண்பல் ; அவற்றையும் இத்துணைய வென்று எண்ணிற்றிலேன் என்பதாம் . இனி, பழையவுரைகாரர், “வம்பலிர், பொறையன் எனைப் பெரும் படையன் என்றனிராயின் அவன் தானையிடத்துத் தேரும் மாவும் மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணிற்றிலன் ; ஆயின், அவன் தானையின் யானை தான் |