தொடர்பினைக் கொண்டிருந்த முதல் இராசராச சோழன், சேர மன்னர்களின் வீரச்செயல்களைப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் கண்டு, அவற்றைப் பின்பற்றித் தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி அமைத்திருத்தலும் கூடும். இக் கொள்கை உறுதி யெய்துமாயின் கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே பதிகங்கள் இயற்றப்பெற்றுப் பதிற்றுப்பத்தும் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும். பதிகங்களுக்கும் உரை காணப்படுகின்றமையால் அவை உரையாசிரியர் காலத்திற்கு முற்பட்டவை என்பது திண்ணம். பதிற்றுப்பத்தில் இக்காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பதிகங்களையும் ஆராயுங்கால், கடைச்சங்க காலத்தில் உதியன் மரபினர், இரும்பொறை மரபினர் ஆகிய இரு சேரர் குடியினர், சேரமண்டலத்தைத் தனித்தனிப் பகுதிகளிலிருந்து அரசாண்டனர் என்பது நன்கு புலனாகின்றது. அவ் விரு மரபினரும் தாயத்தினர் ஆவர். அவர்களுள் எண்மரே இப்பொழுது கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்கள் என்பது உணரற்பாலதாகும். அவ் வெண்மருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆகிய ஐவரும் உதியன் மரபினர் ஆவர்; செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, இளஞ்சேர லிரும்பொறை ஆகிய மூவரும் இரும்பொறை மரபினர் ஆவர். இரண்டாம் பத்தின் தலைவன் இயமவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியஞ் சேரலுடைய மகன் என்பது பதிகத்தால் அறியப்படுகிறது. ஆகவே, இந்நாளில் கிடைக்காத முதல் பத்து நெடுஞ்சேரலாதன் தந்தையாகிய உதியஞ்சேரலின்மீது பாடப்பட்டதா யிருத்தல்வேண்டும். மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்போன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாவன். நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஐந்தாம் பத்தின் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆறாம் பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாதனுடைய மக்கள் ஆவர். எனவே, பதிற்றுப்பத்துள் முதல் ஆறு பத்துக்களும் உதியஞ்சேரல், அவன் புதல்வர் இருவர், அவன் பேரன்மார் மூவர் ஆகிய அறுவர்மீது பாடப்பெற்றவை எனலாம். ஏழாம் பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோவாழியாதன் என்பான், அந்துவஞ்சேர லிரும்பொறையின் மகன் ஆவன். எட்டாம் பத்தின் தலைவன் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை என்பவன், செல்வக்கடுங்கோவின் |