யளித்தோம்பலும் செங்கோன்மை யாதலின், “சிறியோரை யளித்தி யென்றார் ; “வல்லா ராயினும் வல்லுநராயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை யாகுமதி” (புறம். 27) எனச் சான்றோர் கூறும் முதுமொழிக் காஞ்சியானு மறிக. நின்வயின் நல்லிசை, பிரிந்த நல்லிசையென இயையும். புகழ்வரும் வாயில்கள் கல்வி, ஆண்மை முதலாகப் பலவாதலின், புகழும் பலவாதல் பற்றி, “நல்லிசை யறியா” எனப் பன்மையாற் கூறினார். ஒருவன் புகழ்க்கு அவன் காரணமாயினும், அவனைத் தனக்கு ஆதாரமாகக் கொள்ளாது அவனிற் பிரிந்துசென்று உலகத்தை ஆதாரமாகக் கொண்டு அவன் மடியினும் தான் மடியாது நின்று நிலவுவது புகழ்க்கியல்பாதலின், “நின்வயிற் பிரிந்த நல்லிசை” யென்றார். புகழ் தன்னைச் செய்தோனிற் பிரியாது அவனோடே கிடக்குமாயின், அவன் பொன்றுங்காற் றானும் பொன்றுமென்பதுபட்டுக் குற்றமாய் முடிதலின், “பிரிந்த நல்லிசை” எனச் சிறப்பித்தார். இக் கருத்தே பற்றிப் பழையவுரைகாரரும், “பிரிந்த நின் வயின் நல்லிசை யெனக் கூட்டுக” என்றும், “பிரிதல் தன்னைவிட்டுத் திக்கு விதிக்குகளிலே போதல்” என்றும் கூறுதல் காண்க. “நின் வயிற் பிரிந்த நல்லிசை” யெனக் கிடந்தபடியே கொண்டு, “நின்பானின்றும் பிரிந்து சென்ற நினது நல்லிசைகள்” என்பாரு முளர் ; நின் பானின்றும் பிரிந்து சென்ற என்ற வழி நின்னின் நீங்கிய புகழென்றாகிப் பொருள் சிறவா தொழிதலின், அது பொருளன்மை யறிக. நீ பெற்றுள்ள புகழ்களைப் பிறர் கனவினும் பெற்றறியோர் என்பார், புகழ் மேலேற்றி, நின் நல்லிசை” கனவினும் பிறர் நசை யறியா” என்றார், “நசை யறியா” என்றதனால், நின் பகைமைக்கஞ்சிப் பிறர் கனவினும் நீ பெற்ற புகழ்களைப் பெறுதற்கு விரும்புவதிலர் என்பது கூறியவாறாயிற்று. இவ்வாறு உயிர் போற்றாமையால் ஆண்மையும், கொடை போற்றாமையால் வண்மையும், பெரியோர்ப் பேணிச் சிறியோரையளித்தலால் செங்கோன்மையும் பிறவும் அளத்தற்கரியவா யிருத்தலால், ஏனைய பிறவும் அத்தன்மையனவே யென்பார், “அனைய வளப்பருங் குரையை” யென்றார். 8 - 19. அதனால் ............ நின் புகழே. உரை : அதனால் - ஆதலால் ; நின்னொடு வாரார் - நின் விருப்பப்படி யொழுகுதற் கிசையாமல் ; தம் நிலத்து ஒழிந்து - நினக்கு மாறுபட்டுத்தங்கள் நாட்டிலேயேயிருந்து ; கொல்களிற்றுயானை எருத்தம் புல்லென வில்குலை யறுத்து - நின்னை யெதிர்த்த பிற வேந்தர் தாம் ஏறிவந்த கொல்லுகின்ற களிற்று யானையின் பிடரி புல்லென்னுமாறு அவர் ஏற்றுப் பொருத வில்லின் நாணை யறுத்து அவரைக் கொன்று நீ வெற்றி மேம்படக் கண்டும் ; கோலின் வாரா வெல் போர் வேந்தர் - நின் செங்கோற் கீழ்ப் பணிந்து வருதலைச் செய்யாது வெல்கின்ற போர் செய்தலையுடைய வேந்தரது ; முரசுகண் போழ்ந்து - முழக்கும் முரசின் கண்ணைக் கிழித்து ; அவர் அரசுவா அழைப்ப - அவர்களுடைய பட்டத்தியானை கதறக் கதற ; கோடு அறுத்து இயற்றிய அணங்குடை மரபின் |