1 - 4. வான்மருப்பின் .............. முழங்க. உரை : வால் மருப்பின் களிற்றியானை மாமலையின் கணங்கொண்டு - வெள்ளிய மருப்பினையுடைய போர்க்களிறுகள் பெரிய மலைபோல கூடித் தொக்கு நிற்ப ; அவர் எடுத்தெறிந்த விறல் முரசம் - பகைவர் மேற்கொண்டு முழங்கிய வெற்றி முரசமானது ; கார் மழையின் கடிது முழங்க - கார் காலத்து முகில் போல மிக்கு முழங்கவும் எ - று. போர்க்குரிய ஆண்மை நலம் சிறந்து நிற்கும் யானைகளைக் “களிற்றி யானை” யென்றார். மலையின், இன் ஒப்புப் பொருட்டு. அவர் என்பது “ஒடிவில் தெவ்வர்” (9) என்றதனைச் சுட்டி நிற்றலின், சுட்டு : செய்யுளாதலின் முற்பட வந்தது. கொள்ள வென்பது கொண்டெனத் திரிந்து நின்றது. பழையவுரைகாரரும், “கணங் கொள்ள வெனத் திரிக்க” என்றும், “அவ ரென்றது பகைவரை” யென்றும் கூறுவர். எடு்த்தெறிதல், தம் முற்றுகை தோன்ற மேற்கொண்டு முழக்குதல். வெற்றி குறித்து முழக்கும் முரசாதலின் “விறல் முரசம்” என்றார் ; பலி பெறும் சிறப்புப் பற்றி இங்ஙனம் கூறினாரெனினுமாம். மிகுதிப் பொருட்டாய கடி யென்னு முரிச்சொல் கடிது எனத் திரிந்து நின்றது. 5 - 9. சாந்து...............நின்று. உரை : சாந்து புலர்ந்த வியன் மார்பின் - பூசிய சாந்து புலர்ந்த அகன்ற மார்பினையும் ; தொடி சுடர்வரும் வலிமுன்கை தொடியணிந்தமையால் அதன் ஒளிதிகழும் வலிபொருந்திய முன்கையினையும் ; புண்ணுடை எறுழ்த்தோள் - ஆறாத விழுப்புண்ணையுடைய வலிய தோளினையும் ; புடையலங் கழற்கால் - அத் தோளிடத்தேயணிந்த மாலையொடு வீரகண்டை யணிந்த காலினையும் ; பிறக்கடியொதுங்காப் பூட்கை - முன் வைத்த காலைப் பின் வையாத மேற்கோளினையும் ; ஒள்வாள் - ஒள்ளிய வாட்படையினையுமுடைய ; ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று வணங்காத பகைவர் முன்னே அஞ்சாது நி்ன்று ; எ - று. ஆடவர்க்கு அகன்ற மார்பு சிறப்புத் தருவதாகலின், அதனை விதந்து, “சாந்து புலர்ந்த வியன் மார்பின்” என்றார். தொடி, தோள் வளை. இவர்கள் ஏந்தி யடும் வாட்படையை “ஒள்வாள்” எனச் சிறப்பித்தலின், அதற்கேற்ப, “வலின்முன் கை” யென்றார். பல போர்களைச் செய்து வென்றி மேம்பட்டோரென்றற்கு, அவர் உற்ற புண்ணை விதந்து, “புண்ணுடை யெறுழ்த்தோள்” என்றும், புண்ணுடைத்தாகியும் வலி குறைந்த தின்றென்றற்குப் புண்ணுடைத்தோ ளென்னாது, “எறுழ்த்தோ” ளென்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “புண்ணுடை யெறுழ்த்தோ ளென்றது, எப்பொழுதும் பொருது புண்ணறாத வலிய தோளென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குப் புண்ணுடை யெறுழ்த்தோள் என்று பெயராயிற்” றென்றும் கூறுவர். புடையலங்கழல் : உம்மைத்தொகை. புடையல் - மாலை. “ஈகையங் கழற்கால் இரும்பனம்புடையல்” (புறம். 99) என்றும், “மாயிரும் புடையல் |