போரிலே புண்பட்டு வீழ்தலின்றி வறிதே மூத்து நோயுற்றுச் சாதலைக் கீழ்மையாகக் கருதி, “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்” (அகம். 61) என மேற் சேறல், பண்டைச் சான்றோர் மரபாதலின் “புகல் சிறந்து நாளும் முடிதல் வேட்கைய” ரென்றார். வேட்கை மிகுதியால் போரில் விருப்பம் சிறக்குமாதலின், வேட்கையர் புகல் சிறந்தென இயைக்கப்பட்டது. பழையவுரைகாரர், “முடிதல் வேட்கையரென்றது தாம் எடுத்துக் கொண்ட போர் முடிதலிலே வேட்கை யுடையா ரென்றவா” றென்பர். நெடிய மொழிதலாவது, “தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தல்” (தொல். பொ. புறம். 5), “நெடிய மொழிதலும் கடியவூர்தலும் செல்வமன்று” (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க . இனி, இந் நெடுமொழியை “மாராயம் பெற்ற நெடுமொழி” (தொல். புறத். 8) யாகக் கோடலுமொன்று . இடாஅ ஏணி யென்றது எல்லைக்கு வெளிப்படை அறை, பாசறை. “இடாஅ ஏணி யியலறை” (பதிற் . 24) என வருதல் காண்க. களிறு இயல, மாதாங்க, தேர் திரிந்து கொட்ப, வயவர் மிகைய ராய், வேட்கையராய், நிறுமார், வியலறைக் கொட்ப என இயைக்க . 15 - 18. நாடடிப்படுத்தலிற்.......................அண்ணல் . உரை : நாடு அடிப்படுத்தலின் - பகைவர் நாட்டை வென்று அடிப்படுத்தியதனால்; கொள்ளை மாற்றி - அந்நாட்டில் மேலும் கொள்ளத்தகும் பொருளைக் கொள்ளா தொழித்து ; அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி - கொண்டவற்றை நெருப்பிலிட்டுருக்கி யதனால் ஓடுதல் இல்லாத ஒளிவிடுகின்ற பொற்கட்டிகளை ; கட்டளை வலிப்ப - வீரர் தகுதிகளைச் சான்றோர் வற்புறுத்துரைப்பதால் ; நின் தானை உதவி - அவ்வாறே உன் தானை வீரர்க்கு வழங்கி ; வேறு புலத்திறுத்த வெல்போர் அண்ணல் - வேற்று நாடுகளில் தங்கிய வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே எ - று. பகைவர் நாட்டை அடிப்படுத்தற்கு முன்பு, அதனுட்புக்கு எரி பரந்தெடுத்துச் சூறையாடிக்கொண்ட கொள்ளையை, அடிப்படுத்திய பின்பு பெறுவதின்மையின், “நாடடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி” யென்றும், கொண்ட கொள்ளை பல்வேறுவகைப் பொற்கலன்களாதலால், அவற்றை ஓரின மாக்குதற்காகப் பொடித்துருக்கிப் பொற்கட்டிகளாக மாற்றினமை தோன்ற, “அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி” யென்றும் கூறினார். பழையவுரைகாரரும், ‘நாடடிப்படுத்தலிற் கொள்ளை மாற்றி’ யென்றது, “நாட்டை யடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச் சென்ற கொள்ளையை மாற்றி யென்றவா” றென்றும்,” அழல் வினை யமைதல், ஓட்டறுதல் ; இவ்வடைச் சிறப்பானே யிதற்க நிழல்விடு கட்டியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர் . நிழல், ஒளி. வீரர்க்குச் சிறப்புச் செய்யுமி்டத்து அவரவர் தகுதியும் வரிசையும் தேர்ந்து அதற்குத் தக்கவாறு செய்வது ஆட்சிமுறை யாதலின், “கட்டளை |