33 - 37. முனைகை...........................தோட்கே . உரை : முன்னிலை முனைகை விட்டு - நின் முன்னே நின்று பொரும் போரைக் கைவிட்டு ; செல்லாது - பிறக்கிட்டோடாது ; தூ எதிர்ந்து - நின் வலியோடு பொருது ; பெறாஅத் தாவில் மள்ளரொடு வெற்றி யெய்தமாட்டாமையால் வலியில்லாத வீரருடனே ; தொன்மருங்கு அறுத்தல் அஞ்சி - தொன்றுதொட்டுவரும் தம் குடி வேரோடு கெடுதற்கு அஞ்சி ; துஞ்சா வேந்தரும் கண்ணுறங்காத நின் பகைவேந்தர் தாமும்; அரண் கொண்டு துஞ்சுக - ஒரு நாளைக்கு நீ போரை நிறுத்தி நின் அரிவையைக் காணச் சேறலால், தம் அரணை யடைந்து சிறிது கண்ணுறங்குவராக; நின் பெருந்தோட்கு விருந்துமாக-நின்னுடையபெரிய தோள்கட்கு விருந்தாகவும் அமைக எ - று. முனை, போர், நின் தோள்வலியும் படைவலியும் காட்சி மாத்திரையானே பகைவர்க்கு வெற்றியில்லை யென்பதை யறிவிப்பனவாகவும், அவர்கள் அறியாமல் எதிர்ந்தழிந்தன் ரென்பார், “முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது, தூவெதிர்ந்து பெறாஅத் தாவில் மள்ளர்” என்றார். பெறாஅ : காரணப்பொருட்டு. பெறுதற்குரிய செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. நின் வலியறிந்து பணிந்து நில்லாமையால் அவர் வேரோடு கெடுதல் ஒருதலையாதலை யுணர்ந்தமை தோன்ற, “தொன்மருங்கறுத்தல் அஞ்சி” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது துஞ்சா என முடித்து, நின்னோடு போர் செய்கையைக் கைவிட்டு நின் முன்னே வந்து வழிபட்டு நிற்றலைச் செய்யமாட்டாமையால் துஞ்சாதவென வுரைக்க” என்றும், “தூவெதிர்ந்து பெறா அத் தாவில் மள்ளரொடு என்றது, முன்பு நின் வலியோடு எதிர்த்துப் பின் எதிர்க்கப் பெறாத வலியில்லாத மள்ளரொடு என்றவா” றென்றும் உரைப்பர் . இதுகாறுங் கூறியது கமஞ்சூல் சினஞ் சிறந்து விசும்படையூ நிவந்து காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள, அக்காலத்தே, களிறு இயங்க, மா தங்க, தேர் திரிந்து கொட்ப, வயவர் வியலறைக் கொட்ப, நாடடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி, நிழல்விடு கட்டியைத் தானைக்குதவி, வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல், செழுங்குடிச் செல்வர் தீம்பிழி மாந்தி, இரவலர்க்கு வேண்டுவன ஈயும் கொல்லிப், பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்தணியும் ஆயத்தார் சூழ வுறையும் அரிவை கதுப்பும் நுதலும் அணிகொள ஒருநாட் காணிய, நின்புரவி நெடுந்தேர் பூண்க ; அதனால் தொன்மருங் கறுத்தலஞ்சித் துஞ்சா வேந்தரும் மள்ளருடனே அரண்கொண்டு துஞ்சுக ; நின் பெருந்தோட்கு விருந்துமாக என இயைத்து முடித்தவாறு. பழையவுரைகாரர், “அண்ணல், நின் அரிவை காணிய நின்தேர் ஒருநாட் புரவி பூண்பதாக வேண்டும் ; அதுதான் நின் அரிவைக்கே யுடலாக வேண்டுவதில்லை ; அதனானே துஞ்சா வேந்தரும் துஞ்சுவார்களாக வேண்டும்; அதுதான் நின் பெருந்தோட்கு விருந்துமாக வேண்டும் ; இவ்வாறு இரண்டொரு காரியமாக இதனைச் செய்க என வினை முடிவு செய்க” என்பர். |