இனி, மேலே குறிப்பிட்ட சேரமன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும், அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேரநாட்டில் ஆங்காங்குக் கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனாகின்றன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் பொருட்டுப் பத்துப் பெருவேள்விகள் நடப்பித்து அவர்க்கு விண்ணுலகம் அளித்த வரலாறு மலைநாட்டில் இக்காலத்தும் செவிவழிச் செய்தியாக வழங்கி வருகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பால் குமட்டூ்ர்க்கண்ணனார் பிரமதேய மாகப்பெற்ற ஐந்நூ றூர்களையும் தன்னகத்துக் கொண்டதும் செங்குட்டுவன்பால் பரணர் வருவாய் பெற்றதும் ஆகிய உம்பற் காடு, பிற்காலத்தில் வேழக்காடு என்ற பெயருடன் நிலவியது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியக்கிடக்கின்றது. அன்றியும், சேரநாட்டிலுள்ளனவாகச் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் முதலானவற்றால் உணரக்கிடக்கும் பரணன் கானம், கண்ணன்காடு, கண்ணன்நாடு, காக்கையூர் ஆகிய ஊர்கள், பரணர், குமட்டூர்க்கண்ணனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் பெருமக்களுக்கும் மலைநாட்டிற்கும் ஏற்பட்டிருந்த பண்டைத் தொடர்பினை நன்கு விளக்கி நிற்றல் காண்க. இனி, பதிற்றுப்பத்திலுள்ள பாடல்களுக்குப் பெயர்கள் இடப்பெற்றிருத்தலைப் பதிகங்களின் இறுதியிற் காணலாம். அப்பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு பாட்டிலுங் காணப்படும் பொருள்நயம் பொருந்திய அருந்தொடர்களா யிருத்தல் அறியத்தக்கது. இங்ஙனமே, சங்கத்துச் சான்றோர் சிலர், தம் செய்யுட்களில் அமைத்துப் பாடியுள்ள சில அருந் தொடர்களைத் தம் பெயர்களாகக் கொண்டு விளங்கியமை, புறநானூறு, குறுந்தொகை முதலான சங்க நூல்களால் நன்கு புலனாகின்றது. அவர்களுள் தொடித்தலை விழுத்தண்டினார். இரும்பிடர்த்தலையார், கழைதின் யானையார், குப்பைக்கோழியார், அணிலாடு முன்றிலார், கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறுநுரையார், நெடுவெண்ணிலவினார் முதலானோர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் பாடல்களில் காணப்படும் அருந்தொடர்கள் அன்னோரின் இயற்பெயர்களை மறக்கும்படி செய்துவிட்டமை உணரற்பாலதாம். எனவே, பொருள்வளமிக்க அருந்தொடர்களைக்கொண்ட பதிற்றுப்பத்துப் பாடல்களுக்கு அத் தொடர்களையே பெயர்களாக அமைத்திருப்பது, மிகப் பொருத்தமுடையதேயாம். ஆனால், பிற்காலத்தில் அவ் வழக்கம் மாறிவிட்டது என்பது, சமயச்சார்பில் தோன்றிய பதிகங்களுக்கு அவற்றின் |