பெருங்காற்று மோதியும் பேரியாறுகள் பாய்ந்தும் கலங்காத கடல் என்றற்குத் “தெண்கடல்” என்றார். கலக்கமின்றித் தெளிந்த கடலாற் சூழப்பட்ட உலகத்தைத் தொழின் முறை யொழியாது ஆளுமுகத்தால் தம் பெயர் போகியோராயினும்,சேரரோடு ஒன்றாமையின் ஒன்றாராய்த் தேய்ந்தனரென்பது கருத்தாகக் கொள்க. அரசர் தமக்குரிய ஆட்சிமுறையில் செய்தற்குரிய முறையை யொழியாது செய்யின், ஆட்சியுட்பட்ட வுலகம் எல்லா வளங்களும் நிறைந்து மேன்மையுறும் என்றற்கு, “வையகம் மலர்ந்த தொழின் முறை” யென்றார் ; மலர்ந்த என்றது, நோய் தீர்ந்த மருந்தென்றாற்போலக் காரணப் பொருட்டு. விந்தமலையைச் சார்ந்துள்ள நாடு கடம்பருடைய நாடாதலின், அந்த நாட்டை விதந்தோதினார். விந்தையென்னும் கொற்றவையின் பெயர் கொண்டு நிலவுதலின், “கடவுட் பெயரிய கானமொடு கல்” என்றார். இதனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடன் கடலிடத்தே போர் தொடுத்த கடம்பருடைய நாடும் அவருடைய ஆட்சியும் புகழும் கூறியவாறு. இப் பெற்றியராயினும், கடலிடத்தே செல்லுங் கலங்களைத் தாக்கிக் குறும்பு செய்தொழுகினமையின், அவரை அக்கடலிடத்தே சென்று எதிர்த்துத் தன் வேற்படையை யேவி வென்றாராதலின், “துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு” என்றும், பின்பு அவர் நாட்டுட் சென்று அவருடைய கடம்பு மரத்தைத் தடிந்தா ரென்றற்கு, “கடம்பின் முழுமுதல் தடிந்து” என்றும், வெற்றித் தெய்வ முறைவதாகக் கருதியோம்பினமை தோன்ற “அணங்குடைக் கடம்பு” என்றும் கூறினார். “இருமுந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த்தலைச் சென்று, கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேரலாதன்” (பதிற். 20) என்று பிறரும் கூறியிருத்தல் காண்க.“துளங்கிருங் குட்டந் தொலைய வேலிட்” டென்றது, கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் செய்தியையும் நினைப்பிக்கின்றது. “கோடு நரல் பௌவங் கலங்க வேலிட், டுடைதிரைப் பரப்பிற் படுகடலோட்டிய, வெல்புகழ்க் குட்டுவன்” (பதிற். 46) என வருதல் காண்க. தொடக்கத்தே சேரர்க்குப் பணிந்தொழுகிய கழுவுள் என்பான் பின்னர், வலிய குதிரைகளை யுடைய அண்டர்களையும் வேறு சிற்றரசர்களையும் துணையாகக் கொண்டு பெருஞ்சேர லிரும்பொறையை யெதிர்த்துப் பொரலுற்றான் என்பதை, “பொருமுர ணெய்திய கழுவுள்” என்றும், அப்பொறையன் முதலில் கழுவுளை வென்று, அதுகண்டு வீற்று வீற்றஞ்சி யோடிய மன்னரைத் துணித்தும், அண்டரை வெருட்டியும் மேம்பட்டானென்றற்கு, “கழுவுள் புறம் பெற்று” என்றும், “மன்னர் துணிய நூறி” யென்றும், “அண்டரோட்டி” யென்றும் கூறினார். கழுவுள் அண்டர்கட்குத் தலைவனென்பதும், அவன் தருக்கினை யழித்ததும், “ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலை மடங்க” (பதிற். 71) என்று அரிசில்கிழார் கூறி யிருப்பதனால் அறியப்படும். நன்னனென்பான் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் வாழ்ந்த காலத்தில் தன் பெருவலியால் தருக்கி அவனை யெதிர்த்தானாக சேரமான் அவனுடைய காவல் மரமாகிய வாகையைத் தடிந்து அவனையும் வென்ற செய்தியை, “சுடர்வீ வாகை நன்னற் றேய்த்து” என்றார். அந்நார்முடிச் |