முன்னிய தோன்றிய ; முன்னென்னும் சொல்லடியாகப் பிறந்து முற்பட்டுத் தோன்றிய என்னும் பொருட்டாய பெயரச்சம், பேரியாறென்னும் பெயர் கொண்டது. இனித் தெய்வத்தென்பதனால் தெய்வத்தின் இடமாகிய அயிரை மலையைக்கொண்டு, கூட்டம் முன்னிய என்றதற்குக் கடலைக் கூடுதற்குக் கருதிய என்றுரைத்தலுமொன்று . பேரியாறு இழிதந்தாங்கு நின்வயின் வருநர் என இயையும் ; “மலையினிழிந்து மாக்கடனோக்கி, நிலவரை யிழிதரும் பல்யாறு போலப், புலவரெல்லா நின்னோக் கினரே” (புறம். 42) எனப் பிறரும் கூறுதல் காண்க. இறைத்தோறும் கிணறூறுவது போலச் செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறைபடாது பெருகுதல் கண்டு, “செழும்பல்தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப” என்றார். ஓவம், ஓவியம். ஓவியத் தெழுதியபோலும் அழகமைந்தமையின், “ஓவத்தன்ன வுருகெழு நெடுநகர்” என்றார். அம்மனைக்கண்ணே யிருந்து அதற்கு விளக்கந்தரும் மகளிரனைவரும் கொல்லிப் பாவை போலும் உரு நலமுடையரென்றற்குப் “பாவை யன்ன மகளி” ரென்றார். “ஓவத்தன்ன விடனுடை வரைப்பிற், பாவை யன்ன குறுந்தொடி மகளிர்” (புறம். 251) என்று பிறரும் கூறுப. பாவையன்ன மகளிர் நாப்பண், ஞாயிறு போல விளங்குதி என இயையும். ஆடவர்க்கு மார்பிடத்தே பொறிகள் கிடத்தல் சீர்த்த இலக்கணமாதலின், “புகன்ற மாண் பொறி” என்றும், அம் மார்பில் சாந்தம் பூசி முத்துமாலை யணிந்திருப்பது தோன்ற, “சாந்தமொடு தண்கமழ் கோதை சூடி” யென்றும், தோள்வளை முதலிய பேரணிகளைப் “பூண் சுமந்து” என்றும் கூறினார்.இத்துணையும் மார்பினைச் சிறப்பித்தவர், அதன் பெருமையை விளக்குமாற்றால், கார்வர விளங்கும் மலையொன்றினை யுவமமாகக் கூறுகின்றார். மலையுச்சியி்ல் இந்திர வில்லும் மின்னுத் தொகுதியும் கொண்ட மழை முகில் தவழ, பக்கத்தே வேங்கை மரங்கள் பூத்து நிற்க, அவற்றினிடையே மலையுச்சியினின்று அருவிகள் வீழும் காட்சியைக் காட்டி இவ்வியல்பிற்றாய மலைபோலும் மார்பை யுடையான் என்பார், “அருவியருவரை யன்ன மார்பின்” என்கின்றார். மாண் பொறியும் சாந்தப் பூச்சும் முத்துமாலையும் பேரணிகலன்களும் சேரன் மார்பின்கண் உளவாகக் கண்டு கூறுவார், திருவி்ல்லும் மின்னுத் தொழுதியும் கொண்ட மழை முகிலை யுவமம் கூறி, முத்துமாலையை யருவியாகவும் சாந்தப் பூச்சினைப் பூத்த வேங்கையாகவும் கருதிக் கூறுவது மிகப் பொருத்தமாக வுளது. ஆடவர்க்குளவாகும் சிறப்பும் சீர்மையும அவர்தம் மனைமாண் மகளிரின் கற்பாற் பிறக்கும் புகழாலாதலின், அதனை யுடன் கூறுவார், “சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ” என்றார். இனிப் பழைய வுரைகாரர், “துவைத்த தும்பை யென்றது எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட தும்பைப்போர்” என்றும் “நனவுற்று வினவும் தெய்வமென்றது அத்தும்பைப் போரை நினக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும் கொற்றவை” யென்றும், “தெய்வத்துக் கூட்ட முன்னிய யாறென்றது அத்தெய்வம் கூடி யுறைதலையுடைய அயிரை மலையைத் தலையாகக்கொண்டு ஒழுகப்பட்டயா” றென்றும், “தெய்வம் |